Ashwin saravanan marriage : சக எழுத்தாளரை காதலித்து கரம்பிடித்த நயன்தாரா பட இயக்குனர் - குவியும் வாழ்த்துக்கள்
நயன்தாராவின் மாயா மற்றும் கனெக்ட் போன்ற படங்களின் இயக்குனரான அஸ்வின் சரவணன் தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் மாயா. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான திரைக்கதையால் கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்த இவர், அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவின் இறவாக்காலம் படத்தை இயக்கினார். பொருளாதார நெருக்கடி காரணமாக இப்படம் இன்னும் ரிலீசாகாமல் முடங்கிப்போய் உள்ளது.
பின்னர் அப்படத்தை கிடப்பில் போட்ட அவர், டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கினர். திகில் படமான இது கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கத்தில் தற்போது கனெக்ட் திரைப்படம் தயாராகி வருகிறது.
நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு, தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் தன்னுடன் படங்களில் பணியாற்றிய சக எழுத்தாளரான காவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதுகுறித்து இயக்குனர் அஸ்வின் சரவணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பேனா, பேப்பருடன் தொடங்கிய இந்த பந்தம், கவிதை நடையில் காதலாக முடிந்திருக்கிறது. ஒவ்வொறு முறையும் என்னோடு துணை நின்ற உனக்கு நன்றி. குறிப்பாக மூன்றாவது அலையின் போது உன்னை கரம் பிடிப்பது, ஒரு சாகசம் போலிருக்கிறது” என்று கூறியுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.