ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் நடிகை தேவயானி மகள் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.
பிரம்மாண்டமாக தொடங்கிய சரிகமப சீனியர் சீசன் 5
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் சரிகமப. சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியின் ஜூனியர் சீசன் 4 நிறைவடைந்த நிலையில், தற்போது சீனியர் சீசன் 5 துவங்கியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டுள்ள இந்த சீசனில் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் சுற்று நடைபெற்று வருகிறது.
மகளை போட்டியாளராக களம் இறக்கிய தேவயானி
எளியவர்கள் தொடங்கி பலருக்கும் சரிகமபவில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எளிய பின்னணியில் இருந்து பல கனவுகளுடன் வருபவர்களுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் எளிய பின்னணியில் இருந்து வந்த பலர் சரிகமப நிகழ்ச்சிக்கு தேர்வாகி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை தேவயானியின் மகள் இனியாவும் இந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். தேவயானிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் இனியா. இவர் நன்றாக பாடுவார் என தேவயானி பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
மகளை சரிகமபவுக்கு அழைத்து வர தேவயானி கூறிய காரணம்
இந்த நிலையில் தனது மகளை சரிகமபவில் போட்டியாளராக களம் இறக்கி இருக்கிறார் தேவயானி. ஜீ தமிழ் வெளியிட்டுள்ள ப்ரோமோவில் இனியா பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை பாடுகிறார். அந்த பாடலை கேட்டு நடுவர்கள் இனியாவை செலக்ட் செய்கின்றனர். அதன் பிறகு தான் இனியா தேவயானியின் மகள் என்பது நடுவர்களுக்கு தெரிய வருகிறது. அப்போது நீங்கள் இந்த மேடையை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன என்று நடுவர்கள் தேவயானியைப் கேட்கின்றனர்.
சொந்த முயற்சியில் மேலே வர வேண்டும்
அதற்கு பதில் அளித்த தேவயானி, “இந்த மேடை அனைவருக்கும் எளிதில் கிடைக்காது. என் மகள் அவளுடைய சொந்த முயற்சியில் மேலே வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதற்காகத்தான் சரிகமப நிகழ்ச்சியில் அவளை கலந்து கொள்ள வைத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். தனது மகளை சினிமாவில் கதாநாயகியாக ஆக்க வேண்டும் என்பதே தேவயானியின் லட்சியமாக இருந்து வந்தது.
பாராட்டுகளை குவிக்கும் தேவயானி
இந்த நிலையில் மகளிடம் இருக்கும் பாட்டுத் திறமையை கண்டறிந்து, அவர் சொந்த முயற்சியில் வரவேண்டும் என்பதற்காக, ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்திருக்கும் தேவயானியின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.
