Ajith Manager : பத்திரிக்கையாளரை தாக்கி அடாவடி செய்ததாக அஜித்தின் மேலாளர் மீது போலீஸில் பரபரப்பு புகார்
Ajith Manager : விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது அஜித்தின் மேலாளர் பத்திரிக்கையாளரை தாக்கியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் திருமணம் நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று வெளியிட்டார். இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வின் போது தனியார் பத்திரிக்கை நிறுவனத்தை சேர்ந்த ஆனந்தன் என்கிற நிருபர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் போட்டோ எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, நிருபர் ஆனந்தனை பார்த்து யார் நீ என கேட்டதுடன் மிரட்டல் தொனியில் பேசி உள்ளார். பதிலுக்கு அந்த நிருபரும் சுரேஷ் சந்திராவை பார்த்து யார் என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து சுரேஷ் சந்திராவிடம் மன்னிப்பு கேட்க முயன்றுள்ளார் ஆனந்தன், அப்போது சுரேஷ் சந்திராவின் உதவியாளர்கள் அந்த நிருபரை தாக்கியதுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளி உள்ளனர்.
இதுகுறித்து நிரூபர் ஆனந்தன், அண்ணாசாலை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், செய்தி சேகரிக்கச் சென்ற தன்னிடம் சுரேஷ் சந்திரா அவதூறாக பேசியதாகவும், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து அவரது உதவியாளர்கள் தன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதாகவும் கூறியுள்ள ஆனந்தன், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Nayanthara : செல்போனுக்கு அனுமதி இல்லை... நயன் - விக்கி திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா?