வாழ்க்கை முடிந்தது..’ நொந்து போன செல்வராகவன்... நெகிழ்ச்சி தந்த சேரன்...
அன்பான வார்த்தைகளால் ஆறுதல் கூறிய சேரனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
பிரபல இயக்குனர் செல்வராகவன் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ‘சாணி காயிதம்’ எனும் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்து உள்ளார். இந்த படத்தில் செல்வராகவனுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது ரிலீஸுக்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் "நானே வருவான்" படத்தை இயக்கி வருகிறார். தாணு தயாரித்து வருகிறார். இதில் நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக யுவன், ஒளிப்பதிவாளராக யாமினி யாக்னமூர்த்தி பணிபுரிந்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் : "வாழ்க்கை முடிந்தது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார் ...வேதனை இன்றி விடியல் இல்லை..." என சோகமாக ட்வீட் செய்திருந்தார்.
இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த இயக்குனர் சேரன் : சில நேரம் வேதனை அனுபவிக்கும் மனிதனாக இருப்போம்.. சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாக இருப்போம்.. வாருங்கள்.. உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வை அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப்போலவே செல்வா... இவ்வாறு ஆறுதல் கூறியிருந்தார்.
இந்த பதிவிற்கு நன்றி கூறியுள்ள செல்வராகவன் ; அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார் ! தங்களின் “ ஆட்டோகிராப் “ உட்பட பல படங்கள் எங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்திருக்கின்றன. தங்களின் படங்களை எதிர்பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஒருவன். ! என நெகிழ்ச்சி பதிவு செய்துள்ளார்.