பாலு மகேந்திராவின் மனைவியும், நடிகையுமான ஷோபா, சினிமாவில் ஜொலித்தது முதல் அவரின் தற்கொலை வரை பலரும் அறிந்திடாத சில தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tragic Life Story of Actress Shobha : “தட்டுங்கள் திறக்கப்படும்” என்ற படத்தில் நடிகரும் இயக்குனருமான சந்திரபாபு மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது மூன்றாவது வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் ஷோபா. சாகும் வரை சினிமாவிலேயே இருந்தார். தனது 18 வயதுக்குள் 75க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து முடித்துவிட்டார். மலையாள சினிமாவும் தமிழ் சினிமாவும் இவர் திறமையை சரிவர பயன்படுத்திக் கொண்டது.
தனது பதினெட்டு வயதைக் கூட பூர்த்தி செய்யாவிடினும், தான் இறந்து 45 (1980) ஆண்டுகளாகியும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர் ஏற்று வாழ்ந்த பாத்திரங்களும் தான்.
தற்கொலை செய்துகொண்ட ஷோபா
ஷோபாவின் இயற்பெயர் "மகாலட்சுமி மேனன்" இவர் தாயார் "பிரேமா மேனன்"னும் ஒரு நடிகை தான். ஒளிப்பதிவாளர், இயக்குனர் பாலுமகேந்திரா மூலம் அவரது படங்கள் மட்டுமின்றி சிறந்த நடிப்பை வெளிபடுத்தக்கூடிய பல முக்கிய படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்தனர் அவர்கள் குடும்ப வாழ்வும் கசந்து 1980ல் தற்கொலை செய்துகொண்டார். இவர் தாயார் ஷோபாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன் விசாரணை முடிவதற்குள் தாயார் பிரேமாவும் தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்க்கை வரலாறு பின்னர் "லேகாவின் மரணம் ஒரு பிளாஷ்பேக்" என்று திரைப்படமாக வெளிவந்தது.

ஷோபாவின் நடிப்பில் மின்னிய தமிழ் கதாபாத்திரங்கள்
“முள்ளும் மலரும்” தமிழ் சினிமாவின் வரலாற்றில் இருந்து நீக்கவே முடியாத படங்களில் ஒன்று “முள்ளும் மலரும்” தன தங்கை மீது உயிரையே வைத்திருக்கும் முரட்டுத்தனமான அண்ணன் காளிக்கும், நிறைய படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருந்தாலும் தன்னை உயிராக நேசிக்கும் மனம் கவர்ந்த நாயகனுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும், அச்சம் மடம் நாணம் எல்லாம் கலந்த ஒரு கிராமத்து பாசக்கார தங்கையாக வாழ்ந்து இருப்பார் ஷோபா.
“மூடுபனி” சைக்கோ திரில்லர் படங்களில் மிக முக்கயமானது. தன கடந்தக் கால ஏமாற்றங்களால் பெண்களை தொடர் கொலைகள் ஒரு சைக்கோ கொலைகாரனோடு வாழ்ந்து, அவனின் மென்மையான பக்கங்களை நேசித்து காதலாகி கசிந்து, பிறகு அவன் அவளை கொலை செய்ய துரத்தும் போது ஓடி ஒளிந்து, பயந்து நடுங்கி என்று நொடிக்கு நொடி அற்புத முக பாவங்களை காட்டி மயக்கி இருப்பார் ஷோபா.
“அழியாத கோலங்கள்” விடலைப் பருவத்தில் விரகத்தில் தவிக்கும் மாணவர்கள், அதில் இருந்து மீண்டு வரும் கதைகள், அந்த வயதின் உணர்சிகளை கூறும் கதைகள் தமிழ் சினிமாவில் குறைவு, அப்படியே பேசினாலும் அவை அந்தரங்கம் சார்ந்த படங்களாகவே இருக்கும். ஆனால் தன் மீதே மோகம் கொண்டு அலையும் தன் மாணவர்களை நல்வழிப்படுத்தும், அன்பான ஆசிரியையாக, பிற்காலத்தில் அவர்கள் மனதில் ஒரு தாயின் ஸ்தானத்தை பெரும் அளவுக்கான கருணை நிறைந்த ஆசிரியையாக நடித்து “பெண் ஆசிரியர்களுக்கே பெருமை சேர்த்து இருப்பார் ஷோபா.
“நிழல் நிஜமாகிறது” தான் ஒரு வேலைக்காரியாக இருந்தாலும் கற்பனையில் மகாராணியாக வாழும் தன் அப்பாவிதனத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்திய பணக்கார வாலிபனின் காமவேட்கையை காதலென்று நினைத்து ஏமாந்தது கூடத்தெரியாமல், அவன் பெயர் கெட்டு விடக்கூடாது என்று பலியையும், பிள்ளையையும் ஒரு சேர சுமந்து, பின் தனக்காக எல்லா விதமான இன்னல்களையும் அனுபவித்து, தன மீது அன்பை மட்டுமே பொழியும் தன சக ஊழியன் அப்பாவி காசியை ஆரம்பத்தில் வெறுத்தாலும் பிறகு மெல்ல மெல்ல அவனை நேசிக்கும் வேலைக்காரித் திலகமாக வாழ்ந்து இருப்பார் ஷோபா.
“பசி” எப்படியாவது தன் குடும்பத்தை, தம்பி தங்கைகளை வறுமையில் இருந்து மீட்டு தன் வாழ்வும் நல்ல விதமாக அமைத்துக்கொள்ள வேண்டும். குப்பைப் பொறுக்கி வாழும், தன்னை விரும்பும் லாரி டிரைவர் ரங்கனிடம் தன்னையே இழந்து ஏமாந்தது தெரிந்து, வேறு வழியில்லாமல் உயிரையே விடும் குப்பத்து குப்பம்மா பாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார். இந்த குப்பமா பாத்திரதிற்கு தான் இந்தியாவின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் ஷோபா.
“ஏணிப்படிகள்” திரையரங்கில் கூட்டி குப்பை பெருக்கி, சுத்தம் செய்யும் அடிமட்டத் தொழிலாளி, தன் அழகாலும், திறமையாலும் பெரிய நடிகையாகி, கூலி வேலை செய்தபோது தன்னை ஏணிப்படியாக உயர்த்திய காதலனா, குடும்பமா என்று குழப்பத்தில் தவிக்கும் நாயகியாக என்றும் பழசை மறக்காத செல்லக்கண்ணுவாகவே வாழ்ந்து இருப்பார் ஷோபா.
இப்படியான பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்ததால் தான், இறந்து 45 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஷோபா.


