அதர்வாவின் தந்தை முரளி 46 வயதிலேயே இறந்துவிட்டார், தந்தையின் மரணம் தனக்கு ஒருவித பயத்தை கொடுத்ததாக அதர்வா பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

Atharvaa Speaks About his Father Murali : நடிகர் அதர்வா நடித்துள்ள டிஎன்ஏ திரைப்படம் வருகிற ஜூன் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றி மனம் விட்டு பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசியதாவது : நான் முதல் படம் பண்ணி முடித்ததும் அது ரிலீஸ் ஆகி ஒரு பத்து நாட்களில் என்னுடைய அப்பா இறந்துவிட்டார். அதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முடிவையும் நான் என் அப்பாவிடம் கேட்டு தான் எடுப்பேன். அவர் இறந்ததும் அடுத்து என்ன என்பது என்னால் யோசிக்க முடியாமல் இருந்தது. அதன்பின்னர் ஒவ்வொரு படமும் நடித்து முடித்த பின்னர், அது ரிலீஸ் ஆகுமா.. இல்லையா என்கிற ஒரு சூழல் வரும் அது மனவலியை கொடுக்கும் என தெரிவித்தார்.

தந்தை மரணம் பற்றி அதர்வா சொன்னதென்ன?

அதர்வாவின் தந்தை முரளி 46 வயதிலேயே இறந்துவிட்டார். அதனால் வாழ்க்கையை நினைத்து பயந்தது உண்டு என கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அதர்வா, இது நிச்சயமில்லாத வாழ்க்கை தான். அவரின் மரணம் பெரிய பயத்தை கொடுத்தது. என்னை பொருத்தவரை இருக்கும் வரை ஜாலியா இருக்கணும். நல்லா இருக்கணும். யாருக்கு எந்த கெடுதலும் செய்யக்கூடாது. அதில் நான் எப்பவுமே உறுதியாக இருக்கிறேன். நான் எப்பவுமே என் அம்மாவின் செல்லப்பிள்ளை என அதர்வா தெரிவித்தார்.

பராசக்தி பட அப்டேட்

பராசக்தி படத்தை பற்றி அதர்வா பேசுகையில், எனக்கு சுதா கொங்கரா மேடம் பரதேசி படத்தில் பணியாற்றியபோதிலிருந்தே தெரியும். அதில் பாலா சாரிடம் சுதா மேடம் பணியாற்றினார். அப்பவே பயங்கர கண்ட்ரோல்ல வச்சிருப்பாங்க. ஷூட்டிங்ல 500 பேர் இருந்தாலும் எல்லாரையும் தன்னுடைய கண்ட்ரோல்ல வச்சிருப்பாங்க. பராசக்தி படம் நன்கு தயாராகி வருகிறது. படம் இன்னும் முழுவதுமாக முடியவில்லை 65 சதவீதம் முடித்துவிட்டோம். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்பது எனக்கு சரியாக தெரியவில்லை என கூறினார்.