அனுஷ்காவை வைத்து கவுதம் மேனன் போடும் மாஸ்டர் ப்ளான்! வொர்க்அவுட் ஆகுமா?
பிரபல இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம், வரும் நவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது. நீண்ட காலமாக ரிலீசாகாமல் இருந்த இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் வெளியிடுகிறது.
இதற்கு கைமாறாக, அந்நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் கவுதம் மேனன். இந்தப் படத்திற்கு 'ஜோஸ்வா இமை போல் காக்க' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
2020 ஃபிப்ரவரி காதலர் தின கொண்டாட்டமாக ஜோஷ்வா படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, கவுதம் மேனன் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல கதாசிரியர் கோவிந்த் நிஹாலனி எழுதிய கதையை, அடுத்து படமாக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளாராம். 1995-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற கமல்ஹாசனின் குருதிப்புனல் படத்திற்கு கதையெழுதியவர்தான் இந்த கோவிந்த் நிஹாலனி. அவரது கதை ஒன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருப்பதாகவும், இந்த கதைக்கு மாஸ் திரைக்கதை அமைத்து அனுஷ்கா ஷெட்டியை நடிக்க வைக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்தப் படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்ட காலமாக உருவாகிவரும் சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படம், அடுத்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது.
அத்துடன், ஜெயலலிதா பயோபிக்கை வெப் சீரிஸாக எடுக்கும் பணியிலும் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளார். இப்படி ஏகப்பட்ட கமிட்மெண்ட்களுடன் இருக்கும் அவர், அடுத்த படத்திற்காக அனுஷ்காவை வைத்து போடும் மாஸ்டர் ப்ளான் வொர்க்அவுட் ஆகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.