ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்? - பார்த்திபன் ஆதங்கம்..
மருத்துவக்கனவு பாதியில் கருகியதை தாங்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டு தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் இறப்பிற்கு நியாயம் கேட்டு மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பிரபலங்களும் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்...
அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் ...
அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும்
இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தாருக்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்தலும் வன்முறையே.
வாழவே துவங்காத ஒரு இளம் பெண் தன் இன்னுயிரை மாய்த்துக் கொ(ல்)ள்ளும் முன் என்னவெல்லாம் யோசித்திருக்கலாம்? அதில் NEET தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதே பிரதம கோரிக்கையாக இருந்திருக்கவேண்டும்.
அந்த நீள் கனவோடே அவரின் மீளா கண்ணடைத்தல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். ஏழைகளின் ஓலத்திற்கும் ஒப்பாரிக்கும் Gst போட்டு விசும்பலாக்க நடுவன் அரசு நன்கு அறிந்திருக்கிறது தானே... செய்துக்கொண்டால்தானே அது தற்கொலை? ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்?
நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர்.
அம்மருத்துவரையே கொல்வது ? பெருந்துயர்! இனி
மறு துயர்- மறு தவற் நிகழுமுன் தடுக்க, இன்று கோர்க்கும் இளைஞர்களின் கரங்கள் விலகா
போர் நிகழ வேண்டும்.