7 கோடி எங்கே...? டீல் பேசி முடித்து விட்டு... தில்லு முள்ளு செய்யும் விஷால்...! பின்னணியில் லைகா தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு...!
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் வந்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி தமிழ் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான பாரதிராஜா, டி ராஜேந்தர், ராதாரவி, ரித்தீஷ் உள்ளிட்டோர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, இன்று சென்னை தியாகராய நகரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
திரையுலகினர், போராட்டத்துக்குப் பின் பல திரைப்படங்கள் வெளியாகாமல் காத்திருக்கும் போது, தான் நடித்த இரும்புத்திரை படத்தை தயாரிப்பாளர் சங்கப் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி விஷால் வெளியிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் விஷால் பதவி விலக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பதவியிலிருந்து இறக்கும் சூழல் உருவாகும் என தயாரிப்பாளர் ஜே.கே.ரித்தீஷ் எச்சரித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தில், பொறுப்புக்கு வந்த போது விஷால் அணியினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தயாரிப்பாளர் ராஜன் குற்றம்சாட்டினார். தில்லு முல்லு செய்யும் தயாரிப்பாளர் சங்க அமைப்பு தேவையா? என ராதாரவி கேள்வி எழுப்பினார்.
இதுவரை தமிழ் ராக்கர்ஸ் யார் என்பது குறித்து விஷால் வெளியிடாததற்கு காரணம். அவர்களுடனான டீலை விஷால் முடித்துக்கொண்டதுதான் இதற்கு பின்னணியில் லைக்கா நிறுவனம் உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து பேசிய டி. ராஜேந்தர், வைப்புத் தொகை 7 கோடி ரூபாய் எங்கே போனது? எனக் கேள்வி எழுப்பினார். வீடியோ பைரசியைக் குறைக்க தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிப்பேன் என்று இரும்புத்திரை இசை வெளியீட்டு விழாவில் மார்தட்டியதன் முடிவு என்ன? என்றும் வினவினார். பெரிய நடிகர் படமே 200 தியேட்டருக்கு மேல் ரிலீஸ் ஆகக் கூடாது என்றவர், தமது இரும்புத்திரை என்ற படத்தை மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்கில் திரையிடலாமா எனவும் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பினார்.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவற்றுக்கு தென்னிந்திய எனத் தொடங்கும் பெயருக்கு பதில் தமிழ் என மாற்ற வேண்டும் என பாரதிராஜா வலியுறுத்தினார்.