admin system is not correct tin tamilnadu...kamal press meet
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் அதிகமாகியுள்ளது என்றும் இந்கு சிஸ்டம் சரியல்ல என்று முதலில் கூறியது நான் தான் என்றும் நடிகர் கமலஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இதனால்தான் .நடிகர் ரஜினிகாந்த் கூறிய சிஸ்டம் சரியல்ல என்ற கருத்தை நான் எதிர்க்கவில்லை எனவும் கமல் கூறினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நாள்தோறும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது என மறுத்தார்.
சட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது அந்த சட்டம் தன்னை பாதுகாக்கும் என கூறிய கமலஹாசன், தான் கைது செய்யப்பட்டால் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்வேனே தவிர அதை தவிர்க்க மாட்டேன் என்றும் சட்டப்படி சந்திப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் நடித்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், அப்போது கெட்டுப் போகாத கலாச்சாரம், இப்போது மட்டும் கெட்டுப் போகிறதா என வினா எழுப்பினார்.
நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் சட்டம் தனது கடமை சரியாக செய்திருக்கிறது என தெரிவித்த கமலஹாசன், . பாதிக்கப்பட்டவர் பக்கத்தில் தான், தான் எப்போதும் இருப்பேன் என்றும் கூறினார்.
ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும் என தாங்கள் கோரிக்கை வைத்தததைப் போல் குறைக்கவில்லை என்றாலும், ஓரளவு வரி குறைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என கமல் தெரிவித்தார்.
அதே நேரத்தில் குளிர்பானங்களுக்கு அளிக்கப்படும் மரியாதை கூட சினிமாவிற்கு வழங்கப்படவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது என்றும் இங்கு சிஸ்டம் சரியல்ல என்று முதலில் கூறியது தான் தான் என்றும் பேசிய கமல் அதனால் தான் , நடிகர் ரஜினிகாந்த் கூறிய சிஸ்டம் சரியல்ல என்ற கருத்தை நான் எதிர்க்கவில்லை என தெரிவித்தார்.
