Nikki Galrani complaint : தனுஷ் மீது நடிகை நிக்கி கல்ராணி பரபரப்பு புகார்.... உடனடியாக ஆக்ஷன் எடுத்த போலீசார்
நடிகை நிக்கி கல்ராணி தனுஷ் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடி ஆக்ஷன் எடுத்த போலீசார் திருடுபோன பொருட்களை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, மரகத நாணயம், கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்துள்ளார். சென்னையில் வசித்து வரும் இவர் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், தனது வீட்டில் பணிபுரிந்த தனுஷ் என்ற இளைஞர், தனக்கு சொந்தமான ஆடைகளையும் விலை உயர்ந்த கேமராவையும் திருடிச் சென்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
நடிகை நிக்கி கல்ராணி அளித்த புகாரின் பேரில் இளைஞர் தனுஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து அவர் திருப்பூரில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்று இளைஞர் தனுஷை மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் இருந்த நடிகை நிக்கி கல்ராணியின் ஆடை மற்றும் கேமராவை பறிமுதல் செய்ததோடு, அவரையும் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.
திருடுபோன தனது விலை உயர்ந்த கேமரா மற்றும் ஆடைகள் கிடைத்துவிட்டதால் நடிகை நிக்கி கல்ராணி, தனுஷ் மீது மேற்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க, போலீசிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.