பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் தாயார் மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாதுரி தீட்சித், இவரின் தாயார் சினேலதா இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 91.
மாதுரி தீட்சித்தின் தாயார் சினேலதா தீட்சித் இன்று (மார்ச் 12) காலை 8.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 91. மாதுரி தீட்சித்தின் தந்தை ஷங்கர் தீட்சித் கடந்த 2013ம் ஆண்டு காலமானார். கணவர் இறந்த பின்னர் சினேலதா, தனது மகள் மாதுரி தீட்சித் உடன் தான் வசித்து வந்தார். மாதுரி தீட்சித்தின் தாயார் சினேலதா ஒரு சிறந்த கிளாசிக்கல் பாடகியாகவும் திகழ்ந்து வந்துள்ளார்.
மாதுரி தீட்சித்தும் தன் தாயிடம் இருந்து தான் இசை கற்று இருக்கிறார். மாதுரி தீட்சித் தவிர, சினேலதாவுக்கு பார்தி மற்றும் ரூபா தீட்சித் என மேலும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மாதுரி தான் சினேலதாவின் செல்ல மகளாக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி மாதுரி தீட்சித்தின் கணவர் ஸ்ரீராம் நேனி ஒரு மருத்துவர் என்பதால், அவர் தான் சினேலதாவின் உடல்நலத்தையும் அருகில் இருந்தே கண்காணித்து வந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்... படக்குழுவினருடன் சண்டை போட்டதால் பரபரப்பு
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த சினேலதா இன்று காலை இயற்கை எய்தி உள்ளார். தாயின் மறைவால் சோகத்தில் மூழ்கிய நடிகை மாதுரி தீட்சித்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக மாதுரியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாதுரி தீட்சித்தின் தாயார் சினேலதாவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் பாலிவுட் பிரபலங்கள் சிலரும் கலந்துகொள்ள உள்ளனர். மும்பையில் வோர்லி பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சினேலதாவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... சரித்திரம் படைக்குமா RRR? நாளை ஆஸ்கர் விழா... இந்தியாவில் நேரலையில் எப்போது? எப்படி பார்க்கலாம்? - முழு விவரம்