விஜய் சேதுபதியின் “க/பெ ரணசிங்கம்” ஓடிடியில் வெளியாகும் ஆனால்... இயக்குநரே சொன்ன தகவல்...!
இந்நிலையில் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தை ஆன்லைன் தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வெறும் 70 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவாராம். மீதி கதை அவருடைய மனைவியான ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றியே நகரும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற்றது.
தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் என்பது பார்க்கும் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. சாதி மத அரசியலை தாண்டி இன்னைக்கு தண்ணியையும் காற்றையும் வைத்து தான் மொத்த உலக அரசியலும் நடக்க போகுது என விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. “2000 பேருக்கு வேலை கொடுத்துட்டு விவசாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிப்பாட்டினா எப்படி சார்”, நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணி வண்டி தள்ளிக்கிட்டு திரியுறாங்க, அந்த கரண்ட் கம்பெனிகாரன் ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்குறான் பிளேட் கழுவ, அதை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றியா? என விஜய் சேதுபதி பேசுவது என உள்ளூர் தண்ணீர் பிரச்சனை முதல் உலக அரசியல் வரை பேசிய இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
நயன்தாராவின் அறம் படத்தை போல, க/பெ ரணசிங்கமும் முக்கிய இடத்தை பிடிக்கும் என இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரான் புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பல படங்களின் தயாரிப்பாளர்கள் ஆன்லைன் தளமான நெட் பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்டவற்றில் படங்களை வெளியிட தயாராகி வருகின்றனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் உருவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது சூர்யாவிற்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தை ஆன்லைன் தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ள இயக்குநர் விருமாண்டி. க/பெ ரணசிங்கம் திரைப்படம் நிச்சயமாக தியேட்டரில் வெளியான பிறகு தான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மீதமுள்ள பணிகள் நிறைவடைந்த பிறகு ரிலீஸ் குறித்த தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.