வாக்களிக்க சைக்கிளில் வந்த தளபதி விஜய்! ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி..!
நடிகர் விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வருகை தந்தார். அவரை காண ரசிகர்கள் கூடியதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வருகை தந்தார். அவரை காண ரசிகர்கள் கூடியதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஆகியவற்றிற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தலில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் பணிக்காக 1.58 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் காலை 7 மணியில் இருந்தே வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை திருவான்மியூரில், தல அஜித் முதல் ஆளாக ஒட்டு பதிவு நடைபெறும் முன்னரே வாக்கு சாவடி மையத்திற்கு வந்து, காத்திருந்து தன்னுடைய மனைவியுடன் வாக்களித்தார்.
இவரை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பிரபலங்கள் பலர் தொடர்ந்து வாக்களித்து வரும் நிலையில், தளபதி விஜய் யாரும் எதிர்பாராத விதமாக சைக்கிளில் வந்து ஓட்டு போட்டுள்ளார். மேலும் நீலாங்கரையில் உள்ள வாக்கு சாவடியில் விஜய் வந்ததை அறிந்து, ரசிகர்கள் திரண்டதால் அவர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் உரிய பாதுகாப்புடன் உள்ளே சென்ற விஜய், வாக்களித்து விட்டு, மை வைத்த விரலை கேமரா முன் காட்டனார். விஜய் வீட்டில் இருந்து சைக்கிளில் வந்தது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு வருகிறது.