பல மாணவர்கள், மாணவிகள், பிரபலங்கள் என பசியும் பட்டினியுமாக மெரினா கடற்கரையில் உச்சி வெய்யிலில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை தீவிர படுத்தியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து வரும், மூத்த நடிகர் சிவகுமார் தனது கருத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியுள்ளது .

கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்.

குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து, பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து வருகிறது.

ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது, விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச்சொருகி, நாக்கை வெளியே தள்ளியவாறு, அந்த மாடு கீழே விழுந்து இறந்தபின், அதை எடுத்துச் சென்று உணவாக்குவது.

ஆனால் தமிழ் நாட்டில் மாட்டை அப்படி யாராவது கொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வெளிநாட்டு மாடு இனத்தை இந்தியாவில் திணிக்கும் சதியே இந்த ‘பீட்டா’ சட்டம். 

உண்மையிலேயே விலங்கினத்தை பாதுகாக்க இந்தச் சட்டம் இயற்றப்பட்டதென்றால், ஆங்கிலேயர் காலத்தில் துவங்கி, இன்றும், தினமும் லட்சக்கணக்கான மாடுகளை, ஈவு இரக்கமின்றி கொன்று, அதன் இறைச்சிகளை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது, ‘கோமாதா நம் குல மாதா’என்று பசுவைக் கும்பிடும் பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? பசு வதைத் தடைச்சட்டம் இதற்குப் பொருந்தாதா?

சீறும் சிங்கங்களாக தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியுடன் போராடுகிறார்கள்.

 மக்கள் நலனுக்காகவே சட்டம். நீதிமன்றம் இதைப் புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும். இவ்வாறு நடிகர் சிவகுமார் உணர்ச்சிபொங்க தன்னுடைய கருத்தை அறிக்கையாக கூறியுள்ளார்.