ஜாம் பஜாரில் காய்கறி விற்ற நடிகை சமந்தா!! அவர் செய்ற நல்ல காரியத்தைப் பாருங்க !!
ஏழை-எளிய மக்களுக்கு உதவுவதற்கென தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் நடிகை சமந்தா சென்னை ஜாம் பஜாரில் காய்கறிகள் விற்பனை செய்தார். அவரது ரசிகர்கள் சமந்தாவிடம் போட்டி போட்டுக் கொண்டு காய்கறிகள் வாங்கிச் சென்றனர்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக உள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் சிவ கார்த்தியேனுடன் நடித்த சீம ராஜா விரைவில் ரீலீஸ் ஆக உள்ளது.
இவர் சினிமாவில் நடித்துக்கொண்டு அதே நேரத்தில் பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி சமூகப் பணிகள் செய்து வருகிறார். ஆந்திராவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கு உதவி வருகிறார். மேலும் பள்ளிகளிலும் துப்புரவு பணிகள் செய்து மாணவ–மாணவிகளுக்கு உதவிகள் செய்கிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா, விஷாலுடன் நடித்துள்ள இரும்புத்திரை பட விழாவில் கலந்துகொள்ள ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்தார். பின்னர் அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டினார். மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் உட்கார்ந்து காய்கறிகளை சமந்தா விற்பனை செய்தார்.
சமந்தவிடம் காய்கறிகள் வாங்க ஜாம்பஜாரில் பெரிய கூட்டம் கூடியது. ரசிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அதிக பணம் கொடுத்து சமந்தாவிடம் இருந்து போட்டி போட்டு காய்கறிகளை வாங்கினார்கள். சிறிது நேரத்திலேயே கடையில் இருந்த அத்தனை காய்கறிகளும் விற்று தீர்ந்தன. இதில் வசூலான தொகை முழுவதையும் நலிந்த மக்களுக்கு வழங்கப் போவதாக சமந்தா தெரிவித்தார்.