’நடிகர் சங்கத்தில் இருப்பவர்களுக்கு அரசியல் ஞானம் இல்லை’...போட்டுத்தாக்கும் நெப்போலியன்...
'நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக கேள்விப்பட்ட அத்தனை சமாச்சாரங்களும் மனதிற்கு வேதனையைத் தருகின்றன. அரசியல் பற்றி எந்த வித ஞானமும் இல்லாதவர்களெல்லாம் அரசியல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது’ என்றார் பிரபல நடிகர் நெப்போலியன்.
'நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக கேள்விப்பட்ட அத்தனை சமாச்சாரங்களும் மனதிற்கு வேதனையைத் தருகின்றன. அரசியல் பற்றி எந்த வித ஞானமும் இல்லாதவர்களெல்லாம் அரசியல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது’ என்றார் பிரபல நடிகர் நெப்போலியன்.
தமிழ் சினிமா, அரசியல் ஆகிய இரண்டையும் விட்டு முற்றிலும் ஒதுங்கி அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள நடிகர் நெப்போலியன் ‘டெவில்ஸ் நைட்’,’கிறிஸ்துமஸ் கூப்பன்’ஆகிய இரு படங்களில் நடித்துவருகிறார். அதில் கிறிஸ்துமஸ் கூப்பன்’ பட அறிமுக விழா நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த நெப்போலியன் நடிகர் சங்கத்தில் நடந்த கூத்துகள் குறித்து கவலை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்,’ நான் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்திருக்கிறேன். அந்த வேளையில் விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் பொதுச்செயலாளராகவும் இருந்தனர். அப்போது நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தோம்.எங்கள் அரசியல் கருத்துகளில் கடுமையான முரண்பாடுகள் இருந்தன.மேடைகளில் ஒருவரை ஒருவர் திட்டித்தீர்த்துக்கொண்டோம். இருப்பினும் நடிகர் சங்கம் என வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். ஆனால் தற்போது நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள், அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல், அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது" என்று வருத்தப்பட்டார்.