மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன், பூபதி மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவிர்க்க முடியாத நடிகை:
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை என்றால் அது மனோரமாவை கூறலாம். சுமார் 1000-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தவர். மேடை நாடகங்களில் துவங்கிய இவரது நடிப்பு பயணம், பின்னர் வெள்ளித்திரையில் மிளிர்ந்தது. காமெடி, செண்டிமெண்ட், வில்லி, என எந்த ரோல் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் தனித்திறமை கொண்டவர்.
வாழ்க்கையில் தோல்வி:
இவரின் சினிமா வாழ்க்கை, வெற்றிகளால் செதுக்கப்பட்டிருந்தாலும்... திருமண வாழ்க்கை தோல்வியை சந்தித்தது. 1937 மே 26 அன்று பிறந்த மனோரமா S. M. ராமநாதன் என்பவரை 1964-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டே வருடத்தில் அவரிடம் இருந்து பிரிந்தார். கணவரை விட்டு மனோரமா பிரியும் போது அவரின் மகன் பூபதி பச்சிளம் குழந்தை. குழந்தையை பார்த்துக்கொண்டே தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார்.
ஹீரோவாக்க ஆசை பட்ட மனோரமா:
தன்னுடைய மகனை கதாநாயகனாக பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட மனோரமாவுக்கு இதிலும் கிடைத்தது ஏமாற்றமே. பூபதி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் வெற்றியடைய தவறிவிட்டது. இதற்கு காரணம் பூபதிக்கு இருந்த அதீத குடி பழக்கம் தான். இதுவே இவரை திரையுலக வாழ்க்கையில் தோல்வியை தழுவ வைத்து. நடிப்பை தாண்டி சில பாடல்களையும் பாடியுள்ளார்.
தூக்கு மாத்திரை சர்ச்சை:
சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாத இவர் கடந்த 2020 ஏப்ரல் மாதம் , ஊரடங்கு காரணமாக மதுப்பானம் கிடைக்காத நிலை ஏற்பட்ட போது , தூக்க மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டது. மேலும் கடந்த சில வருடங்களாவே உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த பூபதி, தன்னுடைய 70-ஆவது வயதில், மூச்சு திணறல் காரணமாக இன்று காலை 10:30 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவரது உடல் தி நகரில் உள்ள இவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
