புதுச்சேரியில் கூலி படத்திற்கான 4 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒரே நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Coolie Movie Tickets : புதுச்சேரியில் கூலி திரைப்படத்தின் 4-ஆயிரம் டிக்கெட்களையும் பிரபல லாட்டரி தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கைப்பற்றியதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் புதுச்சேரி முழுவதும் ஜே.சி.எம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. அந்த செயலியை திறந்தால், பிரபல லாட்டரி தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் புகைப்படத்துடன் ஜே.சி.எம்.மக்கள் மன்றத்தில் ஓட்டர் ஐடி கார்டு வைத்து உறுப்பினராக மாறும் முதல் 2000 நபர்களுக்கு க்யூ ஆர் கோட் மூலம் டிக்கெட் இலவசம் என சார்லஸ் மார்ட்டின் படத்துடன் ஜே.சி.எம் ஆப் டவுன்லோட் செய்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று நூதன முறையில் விளம்பரம் செய்துள்ளனர்.

4000 டிக்கெட் வாங்கிய லாட்டரி மார்ட்டின் மகன்

இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்களுக்கு உண்டான 4000 டிக்கெட்டுகளையும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கைப்பற்றியுள்ளார். இதனால் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து தியேட்டர்களுக்கு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத். புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள அனைத்து திரையரங்குக்கும் சென்று ஓட்டர் ஐடி பதிந்து இலவச டிக்கெட் கொடுத்தால் கூலி படம் ஓடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஓட்டர் ஐடி கார்டை வைத்து மோசடியில் ஈடுபட்டு இலவசமாக கூலி திரைப்படத்தின் டிக்கெட்டை கொடுக்கும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூலி திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் 4000 டிக்கெட்டுகளையும் ஒரே நபர் கைப்பற்றியுள்ள சம்பவம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.