தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 385 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதிகள், சம்பளம் மற்றும் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த முழு விவரங்கள் இங்கே.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) 385 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அலுவலக உதவியாளர், ஓட்டுநர், எழுத்தர் மற்றும் காவலர் ஆகிய பதவிகளுக்கு மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் விவரம்

மொத்தம் 385 காலிப்பணியிடங்கள் உள்ளன. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பணியிடங்கள் உள்ளன என்பதை விரிவாக காணலாம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், மொத்தம் 385 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு 59 இடங்களும், பதிவறை எழுத்தர் பதவிக்கு 26 இடங்களும், அலுவலக உதவியாளர் பதவிக்கு 152 இடங்களும், இரவு காவலர் பதவிக்கு 148 இடங்களும் உள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் இல்லை.

தகுதிகள் மற்றும் சம்பள விவரங்கள்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 18 முதல் 32 வயது வரை இருக்கலாம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 34 வயது வரையிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

• இரவு காவலர்: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது.

• ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பதவிக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பதவிக்கு ஓட்டுநர் உரிமத்துடன் 5 வருட அனுபவம் தேவை.

• எழுத்தர்: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.71,900 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

1. மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்குச் செல்லவும்.

2. முகப்புப் பக்கத்தில் விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. உங்களுக்குத் தேவையான பதவியைத் தேர்வு செய்யவும்.

4. தேவையான விவரங்களை (பெயர், கல்வித் தகுதி, முகவரி, கைப்பேசி எண் போன்றவை) பூர்த்தி செய்யவும்.

5. தேவையான ஆவணங்களை புகைப்பட வடிவில் பதிவேற்றம் செய்யவும்.

6. விண்ணப்பத்தை சமர்ப்பித்து, இறுதியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வகுப்புச் சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), ஓட்டுநர் உரிமம், புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். ஆர்வமுள்ளவர்கள் 30.09.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.