CBSE சிபிஎஸ்இ பள்ளி ஆலோசகர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய ஆன்லைன் தேர்வு. 10,000 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கத் திட்டம். சிபிஎஸ்இ-யின் மாடர்ன் பிளான்!
மாணவர்களின் மனநலன் மற்றும் சமூக-உணர்ச்சி ரீதியான தேவைகளை கவனிக்கும் பள்ளி ஆலோசகர்களின் திறனை மதிப்பிட மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) முடிவு செய்துள்ளது. இதற்காக "ஆன்லைன் ரிமோட் இன்விஜிலேஷன் எக்ஸாம்" (Online Remote Invigilation Exam) எனப்படும் பிரத்யேக தேர்வை வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் உள்ள சுமார் 10,000 ஆலோசகர்கள் மற்றும் நல்வாழ்வு ஆசிரியர்களுக்கு (Wellness Teachers) சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள் கடந்த பிப்ரவரி 2026-லேயே தொடங்கிவிட்டன.
DIGI-EXAM: ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் தளம்
இந்தத் தேர்வுகள் சாதாரண முறையில் நடைபெறாமல், DIGI-EXAM என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட தளம் மூலம் நடத்தப்படும். இது 'புரோக்டர்டு' (Proctored) முறையில் அமைவதால், மாணவர்கள் தங்களின் இடத்திலிருந்தே தேர்வு எழுதினாலும், ஏஐ மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இது தேர்வின் வெளிப்படைத்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
மதிப்பீடு செய்யப்படும் திறன்கள் என்னென்ன?
இந்தத் தேர்வு ஆலோசகர்களின் மனப்பாடத் திறனை சோதிப்பதற்கல்ல. மாறாக, அவர்களின் பின்வரும் திறன்களை மதிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது:
• மாணவர்களுக்கு மனநல ஆதரவு வழங்கும் நடைமுறைத் திறன்.
• தொழில்முறை சார்ந்த ஒழுக்க நெறிமுறைகள் (Ethical Understanding).
• சிக்கலான சூழல்களில் மாணவர்களைக் கையாளும் விதம்.
பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
சிபிஎஸ்இ பள்ளிகள் தங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆலோசகர்களின் விவரங்களை OASIS இணையதளத்தில் உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாரியத்தால் பரிந்துரைக்கப்படும் போது, அந்த ஆலோசகர்கள் கட்டாயம் இந்த மதிப்பீட்டுத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்துடன், அனைத்து பள்ளிகளிலும் மாதவிடாய் கால சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கண்ணியமான மாதவிடாய் சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாகக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


