தானியங்கி வாகனங்களுக்கு தனி ஸ்கெட்ச் - ஹூவாயுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஃபோக்ஸ்வேகன்?
ஹூவாய் நிறுவனத்தின் ஆட்டோனோமஸ் டிரைவிங் யூனிட்டை வாங்க ஃபோக்ஸ்வேகன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான ஃபோக்ஸ்வேகன் ஹூவாய் நிறுவனத்தின் தானியங்கி வாகனங்கள் பிரிவை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தானியங்கி வாகனங்கள் பிரிவில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சொந்தமான பொருட்களை வைத்திருக்கும் ஹூவாய் நிறுவனத்தின் தானியங்கி வாகனங்கள் பிரிவு வேகமாக வளர்ந்து வருகிறது.
பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெறும் பட்சத்தில் இரு நிறுவனங்கள் இடையே பல பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இதுபற்றி ஹூவாய் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இது உண்மையாகும் பட்சத்தில் இரு நிறுவனங்களுக்கும் இது வெற்றி பெறுவதற்கு இணையான பலன்களை தரும். ஹூவாய் நிறுவனம் அமெரிக்காவின் வர்த்தக தடை காரணமாக வியாபாரத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதுபற்றி சீனாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் தரப்பிலும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 2019 ஆண்டில் ஹூவாய் நிறுவனம் தானியங்கி வாகனங்கள் பிரிவை உருவாக்கியது. அன்று முதல் இதுவரை இந்த பிரிவு வேகமாக வளர்ந்து வருகிறது. ஹூவாய் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பங்கள் காரணமாக ஹூவாய் தனது சொந்த தானியங்கி வாகனங்களை உருவாக்கி விடும் என தகவல்கள் வெளியாகி வந்தன.
எனினும், கார் உற்பத்தியை விட பல்வேறு கார் பிராண்டுகளுக்கு உபகரணங்களை வினியோகம் செய்யவே ஹூவாய் திட்டமிட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்திய ஒப்பந்தகள் மூலம் எலெக்ட்ரிக் வாகன துறையில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. இந்த நிலையில், தானியங்கி வாகனங்கள் பிரிவிலும் ஆர்வம் செலுத்துவதால் எதிர்கால திட்டமிடலை கருத்தில் கொண்டு ஃபோக்ஸ்வேகன் இவ்வாறு செய்யலாம் என கூறப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு சீனா எப்போதுமே சிறந்த சந்தையாக விளங்கி வருகிறது. 2020 ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பெரிய சந்தையாக சீனா இருந்தது. இந்த நிலையில், தற்போது தானியங்கி வாகனங்கள் பிரிவிலும் கவனம் செலுத்த ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்து இருப்பது சந்தையில் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.