அமெரிக்க வரியால் தமிழகத்தில் ரூ.3,000 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
US Tariffs Cause Rs 3000 Cr Loss To Tamil nadu Exports! அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளதால் இந்தியாவில் கடும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜவுளி, தோல், கடல் உணவுப் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் ஆட்டோ பகுதிகள் போன்ற துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான வேலையும் பறிபோகும் அபாயம் உள்ளது. அமெரிக்க வரியால் தமிழகத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்க வரி விதிப்பால் கடுமையாக பாதிப்பு
தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்குகிறது. 2024-25 நிதியாண்டில், தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி 52.1 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் அமெரிக்காக்கு ஏற்றுமதி 31% பங்கு வகிக்கிறது. அமெரிக்காவின் வரி உயர்வால் திருப்பூர் உள்பட கொங்கு மண்டல பகுதிகளில் 20,000 தொழிற்சாலைகள் பாதிக்கப்படுள்ளன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே மத்திய அரசு இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் பாதிப்பு அதிகம்
இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்காத மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டித்துள்ளார். இது தொடர்பாக செல்வபெருந்தகை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அறிவித்துள்ள புதிய வரிக் கொள்கையால் நாடு முழுவதும் ஏராளமான தொழில், வர்த்தக துறைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெய்தல், தோல், விவசாயம், கடலுணவு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் இருந்தன.
ரூ.3,000 கோடி வர்த்தகம் முடக்கம்
இப்போது அந்த ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் காரணமாக தமிழ்நாட்டின் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த கவலைக்குரியது. இந்தியாவின் பொருளாதார நலனை காப்பதில் ஒன்றிய அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. அமெரிக்கா எடுத்துள்ள முடிவை எதிர்த்து வலுவான நடவடிக்கைகளை எடுக்காமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பது, தமிழநாட்டின் உழைப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு இருந்தும், அதனை நிறைவேற்றாமல் மௌனம் காப்பது மிகவும் கவலையளிக்கிறது.
வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு
எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், அமெரிக்காவின் இந்த அநீதி நிறைந்த வரிக் கொள்கையையும், அதற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி நின்று கொண்டிருக்கும் ஒன்றிய அரசையும் கடுமையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் உழைப்பும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க ஒன்றிய அரசு உடனடியாக வலுவான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
