sri lanka economic crisis : இலங்கை முழுவதும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கை முழுவதும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தடை

இலங்கையில் மக்கள் பயன்படுத்தும் 12 மேற்பட்ட சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூடியூப், ஸ்நாப்சாட், டிக்டாக், இன்ஸ்டாகிரா் உள்ளிட்டவை நேற்று நள்ளிரவு முதல் செயல்பாடு அனைத்தும் நிறுத்தப்பட்டிருப்பதாக இன்டர்நெட் கண்காணிப்பு நிறுவனமான நெட்பிளாக் தெரிவித்துள்ளது

பொருளாதார நெருக்கடி

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடன் அதிகமானதால், அன்னியச் செலாவணி கையிருப்பு 2000 கோடி டாலருக்கும் குறைந்துவிட்டதால் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், அத்தியாவசியப்பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை. 

ஆனால், இறக்குமதிக்கு அரசிடம் அன்னியச்செலவாணி கையிருப்பு இல்லாததால், உணவுப் பொருட்களின்விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியாவிடம் கடனுதவி கோரியுள்ளது இலங்கை அரசு. மேலும் சர்வதேச நிதியத்திடமும் கடனுதவியை இலங்கை கேட்டுள்ளது.

மின்வெட்டு

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் போக்குவரத்து இலங்கையில் பெரும்பகுதி முடங்கிவிட்டது. அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. இலங்கையில் முக்கியமான மின்நிலையங்கள் டீசல் எரிபொருளில்தான் மின்உற்பத்தி செய்கின்றன. தற்போது டீசலும் இல்லாததால், இலங்கையில் நாள்தோறும் 13 மணிநேரம் மின்வெட்டு நீடிக்கிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு நகரில் உள்ள மரிஹயா பகுதியில் இருக்கும், அதிபர் கோத்தபய ராஜபக்சஇல்லத்தின்முன் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை விரட்ட போலீஸார் நடத்திய தடியடியில் ஏராளமானோர் காயமடைந்தனர். 5 பெண்கள் உள்பட 45 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் ஒரு பேருந்து ஜீப் ஆகியவை தீவைத்து கொளுத்தப்பட்டன.

அவசரநிலை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமலும், விலைவாசி உயர்வால் உணவுப் பொருட்களை வாங்கமுடியாமல் மக்கள் கண்ணீர்விட்டு வரும் நிலையில் நாட்டில் அவசரநிலைப் பிரகடனத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிறப்பித்தார்.

இந்நிலையில் மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகத்தான் கருத்துக்களைப் பரப்பி ஒன்று சேர்கிறார்கள் என்று நினைத்த இலங்கை அரசு நேற்று நள்ளிரவு முதல் 12 சமூக ஊடகங்களுக்கு நாடுமுழுவதும் தடைவிதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

சமூக ஊடகங்களுக்கு தடை

இதுகுறித்து நெட்பிளாக் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இலங்கையில் ரியல்டைம் டேட்டாவின்படி இலங்கையில் நாடுமுழுவதும் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. இலங்கையில் நடந்த போராட்டம், அதைத்தொடர்ந்து விதிக்கப்பட்ட அவசரநிலையால் இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இலங்கையில் 36மணிநேரம் ஊரடங்கு உத்தரவையும் அதாவது சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மனித உரிமை மீறக்கூடாது

இதற்கிடையே லண்டனில் உள்ள அம்னெஸ்டி சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “ தேசபாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் அவசரநிலையை இலங்கை கொண்டுவந்துள்ளது. இது மனித உரிமை மீறல்களுக்குச் இட்டுச் செல்லக்கூடாது. அவசரநிலை என்பதும் மக்கள் சுதந்திரமாகக் கூடுதல், செல்லுதலுக்கும்கூட தடைவிதிப்பதும் மனித உரிமை மீறல்தான். இலங்கை அரசு பொருளாதாரத்தை கையாளும் விதத்தால்தான் மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். மக்கள் நடத்தும் போராட்டத்தை அதிகாரிகள் மிரட்டி அடக்கக்கூடாது. சட்டவிரோத கைதுகளையும் செய்யக்கூடாது” எனத் தெரிவித்துள்ளது.