sri lanka economic crisis: இலங்கையில் மக்கள் பெட்ரோல், டீசல் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதாலும், கடும் கோபத்தில் இருப்பதாலும் பெட்ரோல் பங்க்குகளுக்கு வேலைக்கு வருவதற்கு ஆட்கள் தயங்குகிறார்கள். இதனால், பெட்ரோல் பங்க்குகளை திறப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

இலங்கையில் மக்கள் பெட்ரோல், டீசல் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதாலும், கடும் கோபத்தில் இருப்பதாலும் பெட்ரோல் பங்க்குகளுக்கு வேலைக்கு வருவதற்கு ஆட்கள் தயங்குகிறார்கள். இதனால், பெட்ரோல் பங்க்குகளை திறப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பொருளாதார நெருக்கடி

கடந்த 1948ம் ஆண்டுக்குப்பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்துவருகிறது. விலைவாசி விண்ணை முட்டும்வகையில் உயர்ந்துவிட்டதால், மக்கள் சாலையில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.

இலங்கை அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவிட்டதால், வெளிநாட்டு கடன்களையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை, வெளிநாடுகளில் இருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. 

கடும் விலை உயர்வு

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத வகையில் உயர்ந்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப்பின் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. இதன்படி பெட்ரோல், 24.3 சதவீதம் அதிகரித்து, லிட்டர் ரூ.420 ஆகவும், டீசல் 38.4 சதவீதம் அதிகரித்து, 400ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

இந்த விலை உயர்விலும் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு மக்கள் நீண்டவரிசையில் பெட்ரோல் பங்க்குகள் முன்பு காத்திருக்கிறார்கள். ஆனால், பெட்ரோல் விலை ஏற்றத்தை எதிர்பார்த்து பல பங்க்குகள் திறக்காததால் கடும் ஆத்திரத்திலும் கோபத்திலும் மக்கள் உள்ளனர். இதனால் பெட்ரோல் பங்க்குகளை வேலைக்குச் செல் ஊழியர்கள் தயங்குவதால், பெட்ரோல், டீசல் வினியோகத்திலும் சிக்கல் நீடிக்கிறது

திறப்பதில் சிக்கல்

இலங்கையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் உள்ள 40 பெட்ரோல் பங்க்குகளும் இன்னும் திறக்கப்படவில்லை. மக்கள் கோபம் காரணமாகவும், போராட்டம் காரணமாகவும் பங்க்குகளை திறக்க உரிமையாளர்கள் தயங்குகிறார்கள். 

எரிபொருள் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தா சில்வா கூறகையில் “ பெட்ரோல் பங்க்குகளுக்கு பணி்க்கு வருவதற்கு ஊழியர்கள் தயங்குகிறார்கள். பெட்ரோல் , டீசல் இல்லையென்று தெரிவித்தால் மக்கள் ஆத்திரத்தில் தாக்கிவிடுவார்கள் என்று அஞ்சி யாரும் வேலைக்கு வருவதில்லை” எனத் தெரிவித்தார்

பதுக்கல்

இதற்கிடையே பெட்ரோல், டீசல் பதுக்கும் பங்க்குகளைக் கண்டறிந்து போலீஸார் உரிமையாளர்களைக் கைது செய்து வருகிறார்கள். கடந்த திங்கள்கிழமை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இதைத் தெரிந்துகொண்டு முதல்நாளில் இருந்தே பெட்ரோல் பங்க்குகளை உரிமையாளர்கள் மூடிவிட்டனர். இதன் மூலம் கூடுதல் விலைக்கு பெட்ரோல், டீசல் விற்று 46 லட்சம் ரூபாய் லாபம் ஈட்ட திட்டமிட்டனர்.

இலங்கையில் பெட்ரோல், டீசல் பதுக்கிய 130 பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுவரை 429 ரெய்டு நடத்தி 27ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 22 ஆயிரம் லிட்டர் டீசலை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர் என்று போலீஸ் செய்தித்தொடர்பாளர் நிஹால் தால்டுவா தெரிவித்தார்