உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபேக்டரியை தமிழ்நாட்டில் அமைக்கிறது ஓலா..! ஒப்பந்தம் கையெழுத்து
உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஃபேக்டரியை தமிழ்நாட்டில் அமைக்கிறது ஓலா நிறுவனம்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமும் ஆதரவும் அளிக்கின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளை அமைத்து தொழில்துறையை மேம்படுத்துவதில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, மிகத்தீவிரமாக செயல்பட்டு முதலீடுகளை கவர்ந்துவருகிறது.
தொழில்துறை சார்பில் 19 ஆயிரத்து 995 கோடி ரூபாய் முதலீட்டில், 26 ஆயிரத்து 509 பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் தமிழக அரசு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.
அதில் ஓலா நிறுவனத்துடனான ஒப்பந்தமும் ஒன்று. வாகன உற்பத்தியின் கேந்திரமாக இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில், ரூ.2400 கோடி மதிப்பீட்டில் ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்.