வங்கி கடன் மற்றும் கிரெடிட் கார்டு விளம்பர ஸ்பாம் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க TRAI மற்றும் RBI இணைந்து புதிய டிஜிட்டல் ஒப்புதல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல் விளம்பரங்கள் அனுப்ப முடியாது.

தொந்தரவு செய்யும் அழைப்புகள்

முக்கியமான வேலையில் இருக்கும் போது, தொடர்ந்து ரிங் ஆகும் செல்போனை ஓடிச்சென்று எடுத்தால், மறுமுனையில் கடன்வேண்டுமா என கேள்வி கேட்டு தொந்தரவு செய்யும் பெண் உங்களை இனிமேல் தொடர்பு கொள்ள மாட்டார். அதேபோல் இரவுபணி செய்துவிட்டு அசதியாக தூங்கும் போது, போன் செய்து எழுப்பி கிரெடிட் கார்டு வேண்டுமா என கேட்கும் நபரிடம் இருந்து இனிமேல் அழைப்புகள் வராது நீங்கள் விரும்பும் வரை. இனி நிம்மதி உங்கள் சாய்ஸ்தானே!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

TRAI, RBI New Plan

முக்கிய அறிவிப்பு! இப்போது வங்கி கடன், கிரெடிட் கார்டு போன்ற விளம்பர ஸ்பாம் அழைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு வராது. TRAI எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியான RBI-யுடன் இணைந்து, வாடிக்கையாளர்களை பாதுகாக்க ஒரு புதிய டிஜிட்டல் ஒப்புதல் முறை (Digital Consent System) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

எதற்காக இந்த திட்டம்?

பணி சூழலில் வங்கி விளம்பர அழைப்புகள் பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தி வரும் நிலையில், TRAI மற்றும் RBI இணைந்து, வாடிக்கையாளர்களிடம் நேரடியாக ஒப்புதல் பெற்ற பிறகு மட்டுமே வணிக தகவல்கள் அனுப்பலாம் என்ற புதிய நடைமுறையை பைலட் திட்டமாக கொண்டு வருகின்றன.

  • இந்த புதிய முறை எப்படி வேலை செய்யும்?
  • டிஜிட்டல் ஒப்புதல் கட்டாயம்: வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல் வங்கி விளம்பரங்கள் அனுப்ப முடியாது.
  • DLT தொழில்நுட்பம்: இந்த ஒப்புதல்கள் Distributed Ledger Technology (DLT) என்ற பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படும்.

SMS மூலம் தகவல்: ஒவ்வொரு ஒப்புதல் பதிவுக்கும் உடனடியாக “127xxx” என்ற கோடில் ஒரு உறுதிப்படுத்தும் மெசேஜ் வரும். இதில் “opt-out” என்றால் வாடிக்கையாளர் விரும்பவில்லை என்றால் அந்த ஒப்புதலை நீக்கவும் முடியும்.வாடிக்கையாளர்கள் தங்களது ஒப்புதல்களை SMS, வலைத்தளங்கள், அல்லது வங்கியின் மொபைல் ஆப்புகள் மூலமாக பார்க்கவும், நிர்வகிக்கவும் முடியும்.

வங்கிகளுக்கு என்ன செய்ய வேண்டியது?

வாடிக்கையாளரிடமிருந்து தற்போது உள்ள ஒப்புதல்களையும், புதிய ஒப்புதல்களையும் இந்த பாதுகாப்பான DLT முறையில் பதிவுசெய்ய வேண்டும்.வணிக தகவல் அனுப்பும் நிறுவனங்கள் இந்த ஒப்புதல் முறையில் இணைந்தால்தான் திட்டம் வெற்றிகரமாக செயல்படும் என டிராய் கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பயன்கள் என்ன?

  • ஸ்பாம் அழைப்புகள் குறையும்
  • வாடிக்கையாளர் ஒப்புதலின்றி விளம்பரங்கள் வராது
  • எப்போதும் ஒப்புதலை திரும்பப் பெறும் அதிகாரம்
  • நிதி மோசடி வாய்ப்பு குறையும்
  • தகவல் முறையாக உறுதி செய்யப்படும்

இந்த புதிய TRAI-RBI இணை திட்டம், வாடிக்கையாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த முன்முயற்சி. இது போலி அழைப்புகள், மோசடிகள், மற்றும் வேண்டாத விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அனைத்து வங்கிகளும், வணிக நிறுவனங்களும் இதில் கலந்து கொண்டு, பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்க TRAI அழைப்பு விடுத்துள்ளது.