Crude oil price : கவலை தரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு: சவால்களைச் சமாளிக்குமா மத்திய அரசு?
Crude oil price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் அதன் தாக்கத்தால் எழும் பொருளாதாரச் சவால்களை மத்திய அரசு சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் அதன் தாக்கத்தால் எழும் பொருளாதாரச் சவால்களை மத்திய அரசு சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் பொருளாதார ரீதியாக அந்நாட்டை முடக்கும் நோக்கில் பொருளாதாரத் தடையும், கச்சா எண்ணெய் , எரிவாயு இறக்குமதி செய்யவும் அமெரி்க்கா,ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, ஜப்பான் ஆகியவை தடை விதித்துள்ளன.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை இருப்பதால் மேற்கத்திய நாடுகளில் இறக்குமதி பாதிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், கச்சா எண்ணெய் பேரல் 140 டாலர் வரை உயர்ந்தது.
இதன் பாதிப்பு இந்தியாவிலும் விரைவில் எதிரொலிக்கும். இந்தியாவில் 5 மாநிலத் தேரத்ல் காரணமாக இதுவரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், கச்சா எண்ணெய் விலை 130 டாலருக்கு மேல் உயர்ந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் எந்த நேரமும் உயர்த்தலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏனென்றால், கடந்தஆண்டு நவம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை பேரல் 81 டாலராக இருந்தநிலையில், தற்போது பேரல் 140 டாலராக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 60 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அதிலும் வரும் 16ம் தேதிக்குள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்தினால்தான் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவி்க்கின்றன.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் மத்திய அரசு முன் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கலாம்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீட்டை திருப்புவதாலும், இரு பொருட்களையும் வாங்க அமெரிக்க டாலர் அதிகமாகத் தேவைப்படும். டாலரின் தேவை காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து ரூ.77வரை சரிந்தது. ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், வீழ்ச்சியை நோக்கியே செல்கிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருந்தாலும், அதைதூண்டிவிட வேண்டிய பொறுப்பும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டிய கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. பல்வேறு பொருட்களை இறக்குமதி மூலம் இந்தியா நிறைவேற்றி வரும்போது, ரூபாய் மதிப்பு சரியும்போது, அதிகமாக டாலர்கள் தர வேண்டியிதிருக்கும். இது இந்தியாவின் கடன்தரத்தை பாதிக்கும். இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குஇருக்கிறது.
பணவீக்கம் , விலைவாசி உயர்வு
கக்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் உயர்ந்தாலும், அது இந்தியாவில் சாமானியர் வரை பாதிக்கும். எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும்பட்சத்தில் போக்குவரத்துக் கட்டணம் அதிகரித்து, பொருட்களின் விலைவாசி அதிகரிக்கும். பொருட்களின் விலை அதிகரிக்கும்போது, சில்லரைப் பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல.
தற்போது பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 4.5% சராசரியில் இருக்கிறது, ஆனால், அதிகபட்சமாக 6% அடைந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து, அதனால், பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தால் வேறுவழியின்றி ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வட்டிவீதத்தை உயர்த்தும். வட்டிவீதம் உயர்ந்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். ஆதலால், பணவீக்கம் அல்லது விலைவாசி உயர்வு உயராமல் பார்க்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசு இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி
2022-23ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5% இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், நடப்பு கணக்குப்பற்றாக்குறை, வட்டிவீதம் அதிகரிப்பு, நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பு போன்றவற்றின் அழுத்தம் காரணமாக பொருளாதார வளர்ச்சிஇலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்படும். நிதிப்பற்றாக்குறையை அரசு கட்டுப்பாட்டில் வைக்காதபட்சத்தில், ரேட்டிங் நிறுவனங்கள் இந்தியாவின் கடன்தரத்தை குறைக்கும் சூழல் உருவாகும்.
நிதிப்பற்றாக்குறை
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தும்பட்சத்தில் அது மக்களுக்கு சுமையாக மாறாமல் இருக்க ஒருவேளை மத்திய அரசுஉற்பத்தி வரியைக் குறைக்கலாம். அவ்வாறு குறைக்கும்பட்சத்தில் மத்திய அரசு பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, வரிவருவாய் இலக்கை அடைய முடியாது. பெரும் பற்றாக்குறை ஏற்படும். அதாவது பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியில் லிட்டருக்கு ரூ.10 குறைத்தால்கூட, மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு ரூ.90ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும்
அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டுடன் வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரிக்கும். மேலும், ரஷ்யாவுக்கு தேயிலை, மருந்துப் பொருட்கள், வேளாண் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. இந்த தடையால் ஏற்றுமதி பாதிக்கும். இதை சமாளிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.