ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.8,930 ஆகவும், சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440 ஆகவும் விற்பனையாகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

நமது நாட்டில் தங்கத்திற்குத் தனியாக எப்போதும் மக்களிடையே சென்டிமென்ட் இருக்கும்.. சேமிப்பு என்பதைத் தாண்டி அது கலாச்சார ரீதியாகவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கல்யாணம், காது குத்து என எந்தவொரு நிகழ்வானாலும் தங்கத்திற்கு மிக முக்கியமான இடம் நமது கலாச்சாரத்தில் இருக்கவே செய்கிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு

நேற்று அதிரடியாக குறைந்திருந்த ஆபரணத்தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது.கடந்த வாரம் முதல் குறைந்திருந்த ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று ஏற்றம் காணப்பட்டது. ஓரு கிராம் ஆபரணத்தங்கம் 8 ஆயிரத்து 930 ரூபாய்க்கு விற்பனையானது. இது நேற்றைய விலையை விட 220 ரூபாய் அதிகமாகும். சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையானது. மதுரை மற்றும் கோவையில் ஒரு கிராம் தங்கம் விலை 8 ஆயிரத்து 930 ரூபாயாகவும் சவரன் 71 ஆயிரத்து 440 ரூபாயாகவும் உள்ளது.

விலையேற்றத்திற்கு இதுவே காரணம்

 சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து 111 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தை போலவே பலரும் வெள்ளியில் முதலீடு செய்வதாகவும் சமீப காலமாக வெள்ளியில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதாகவும் நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்

கையில் காசு இருக்கா தங்கம் வாங்குவோம்

தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று விலையேற்றம் இருந்தாலும் வரும் வாரங்களில் பெரிய அளவில் விலையேற்றம் இருக்காது என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.