வெளியீட்டுக்கு தயாராகும் பி.எம்.டபிள்யூ. என்ஜின் கொண்ட பறக்கும் கார்
பி.எம்.டபிள்யூ. என்ஜின் கொண்ட பறக்கும் கார் உற்பத்திக்கான அனுமதியை பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாலையில் செல்வதோடு, வானத்திலும் பறக்கும் திறன் கொண்ட வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கனவாக பார்க்கப்பட்டது. தற்போது பல்வேறு நிறுவனங்கள் கார் அளவிலான வாகனங்களை பறக்கும் திறனுடன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில், கிளைன் விஷன் ஏர்கார் தற்போது உற்பத்திக்கு தயாராகி வருகிறது.
இந்த பறக்கும் காரில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக 2020 ஆண்டு ஏர்கார் மாடல் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. தற்போது இந்த வாகனம் ஸ்லோவாக் போக்குவரத்து ஆணையத்தின் சான்றை பெற்று இருக்கிறது. இந்த மைல்கல்லை எட்ட பறக்கும் கார் கிட்டத்தட்ட 70 மணி நேர சோதனையை கடந்துள்ளது. இந்த சான்றை பெற்று இருப்பதன் மூலம் பறக்கும் கார் உற்பத்திக்கு ஒருபடி அருகே சென்று இருக்கிறது.
"ஏர்கார் சான்று பெற்று இருப்பதன் மூலம் தகுதிமிக்க பறக்கும் கார்களின் உற்பத்திக்கான கதவு திறந்துள்ளது. போக்குவரத்து முறைகளின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் எங்கள் முயற்சியின் இறுதி உத்தரவாதம் இது," என பறக்கும் காரை உருவாக்கிய குழுவின் தலைவர் ஸ்டெஃபன் கிளைன் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பறக்கும் கார் துறையில் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாராகி இருக்கும் ஒற்றை நிறுவனமாக கிளைன் விஷன் இருக்கிறது. இந்த கார் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த பறக்கும் காரில் 1.6 லிட்டர், 4 சிலிண்டர் பி.எம்.டபிள்யூ. என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ரோபெல்லர்கள் மற்றும் பலிஸ்டிக் பாராஷூட் போன்றவை இந்த காரில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பறக்கும் கார் அதிகபட்சமாக மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது தரையில் இருந்து 1000 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து செல்லும்.