அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.2.51 கோடி நன்கொடை அளித்த முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!
Ambani family donate 2.52 Crores to Ram Mandir Trust : இந்தியாவின் புதிய யுகத்தைக் காணும் பாக்கியம் தனக்குக் கிடைத்துள்ளதாக முகேஷ் அம்பானி கூறினார். "இன்று ராமர் வருகிறார், ஜனவரி 22 ஆம் தேதி முழு நாட்டிற்கும் ராம தீபாவளியாக இருக்கும்" எனவும் குறிப்பிட்டார்.
![Ambani family donates Rs 2.51 crore to Ayodhya Ram Mandir Trust sgb Ambani family donates Rs 2.51 crore to Ayodhya Ram Mandir Trust sgb](https://static-ai.asianetnews.com/images/01hmrdsg7he5dvwy1npry1r71s/1_363x203xt.jpg)
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா முடிந்தவுடன், கோயில் அறக்கட்டளைக்கு அம்பானி குடும்பத்தினர் ரூ.2.51 கோடி நன்கொடை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டா விழாவில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அம்பானியின் மகள் இஷாவும் தனது கணவர் ஆனந்த் பிரமலுடன் கலந்துகொண்டார்.
கும்பாபிஷேகம் முடிந்ததும், முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது, இந்தியாவின் புதிய யுகத்தைக் காணும் பாக்கியம் தனக்குக் கிடைத்துள்ளதாக முகேஷ் அம்பானி கூறினார். "இன்று ராமர் வருகிறார், ஜனவரி 22 ஆம் தேதி முழு நாட்டிற்கும் ராம தீபாவளியாக இருக்கும்" எனவும் குறிப்பிட்டார்.
"உண்மையில் இந்த மிகப்பெரிய நிகழ்வை நான் நேரில் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதுவே இந்தியா, இதுதான் பாரதம்" என நீதா அம்பானி தெரிவித்தார்.
பிரான் பிரதிஷ்டா விழாவுக்காக அயோத்தி ராமர் கோயிலில் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ஈஷா அம்பானி கூறினார். "இன்று எங்களுக்கு மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். நான் இங்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
அம்பானியைத் தவிர, ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா, ஹீரோ எண்டர்பிரைஸ் தலைவர் சுனில் காந்த் முஞ்சால், பார்தி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் பார்தி மிட்டல், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் சஜ்ஜன் ஜிண்டால், ரியல் எஸ்டேட் நிரஞ்சன் ஹிராநந்தானி போன்ற பல தொழிலதிபர்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
குமார் மங்கலம் பிர்லா கூறுகையில், ராமர் கோவில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவை தான் பார்த்ததை நம்பவே முடியவில்ல என்றார். இது ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று சுனில் பார்தி மிட்டல் கூறினார். பாரத வர்ஷத்தை உருவாக்க நாட்டு மக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
ராமர் கோவில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் கூறினார். "நான் ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்திக்கு வருவேன்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.