தெலங்கானாவில் ரூ.12400 கோடி முதலீடு: அதானி குழுமம் அறிவிப்பு!
தெலங்கானாவில் ரூ.12400 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
![Adani Group announces Investments worth rs 12400 Crore in Telangana smp Adani Group announces Investments worth rs 12400 Crore in Telangana smp](https://static-ai.asianetnews.com/images/01hgxka3gnbtjy8hra0am65sf2/Gautam-adani-companies-market-cap-1701800381973_363x203xt.jpg)
தெலங்கானாவில் ரூ.12400 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஏழு டிரில்லியன் ரூபாய் செலவினத் திட்டத்தின் ஒரு பகுதியாக தெலங்கானா மாநிலத்தில் ரூ.12400 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்போவதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் மூலம் ரூ.5000 கோடிக்கு 100 மெகாவாட் டேட்டா சென்டர் அமைக்கப்பட உள்ளது. மேலும், அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களும் அம்மாநிலத்தில் திட்டங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன்னர், உள்கட்டமைப்பு விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி நிதி திரட்டத் தொடங்கியது. ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்தின் நிதி திரட்டும் முயற்சியை பெருமளவு பாதித்ததுடன் அதன் பங்குகளும் வீழ்ச்சியடைந்தன. இருப்பினும் வங்கியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆதரவை வென்ற அதானி குழுமம், அதன் முக்கிய ஏழு பங்குகளில் ஏற்பட்ட சுமார் 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பில் இருந்தும் மீண்டு வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
மதுரை பூரணம் அம்மாளை சந்தித்து வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!
இக்குழுவானது தனது அறிக்கையை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த நிலையில், அதானி - ஹிண்டன்பர்க் வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை. விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற எந்த அவசியமும் இல்லை. அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதானி குழுமத்துக்கு சாதகமாக அமைந்து அதன் பங்கு மதிப்புகள் ஏற்றம் கண்டுள்ளதுடன், நிதி திரட்டும் அக்குழுமத்தின் முயற்சிக்கும் ஊக்கமளித்துள்ளது.