சென்னை உள்பட ரூ. 11,000 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த பெரிய இறக்குமதியாளர்கள்!!
ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குனரகம் (டிஜிஜிஐ) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஆகியவை 24 பெரிய இறக்குமதியாளர்கள் ரூ.11,000 கோடி அளவிற்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததை கண்டறிந்துள்ளன.
ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (டிஜிஜிஐ) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) இணைந்து 24 பெரிய இறக்குமதியாளர்களின் ஜிஎஸ்டி கணக்குகளில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, ரூ. 11,000 கோடிக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததை கண்டறிந்துள்ளன.
இதுகுறித்து ஏஜென்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 24 இறக்குமதியாளர்கள் சுமார் ரூ.11,000 கோடி வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏழு துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஜவுளித் துறையைத் தவிர எஃகு, மருந்து, நகைகள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன.
ஜிஎஸ்டி உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 20 நாட்களில் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள இறக்குமதியாளர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இப்போது மற்ற இறக்குமதியாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார்.
லாபத்தை அள்ளித் தரும் முதலீடு: 500 ரூபாய்க்குள் டாப் 5 மிட் கேப் பங்குகள்
ஜிஎஸ்டி ஏய்ப்பு தரவு
2021-22 நிதியாண்டில், ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (டிஜிஜிஐ) ரூ.21,000 கோடியை மீட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ், 54,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏய்ப்பு செய்ததை புலனாய்வு நிறுவனம் கண்டறிந்தது. அதில் ரூ.21,000 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், 2022-23 இல் சுமார் 14,000 வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளன. இது 2021-22 இல் 12,574 ஆகவும், 2020-21 இல் 12,596 ஆகவும் இருந்தது.
5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மீட்பு:
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பாக மக்களவையில் நிதி அமைச்சகம் அளித்த புள்ளி விவரங்களின்படி, ஜூலை 2017 முதல் பிப்ரவரி 2023 வரை மொத்தம் ரூ.3.08 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இதில் ரூ.1.03 லட்சம் கோடிக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2023 வரை வரி ஏய்ப்பு செய்ததாக 1,402 பேரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Paytm Lite : இனி ஐபோன் பயனர்கள் UPI PIN இல்லாமல் பணம் செலுத்தலாம்.. எப்படி தெரியுமா?
ஜிஎஸ்டி என்றால் என்ன?
நாம் எந்தப் பொருளை வாங்கினாலும் அல்லது எந்த சேவையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஈடாக வரி செலுத்த வேண்டும். இது சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி என்று அழைக்கப்படுகிறது. ஜிஎஸ்டியின் கீழ், நாம் இப்போது 'ஒரே நாடு, ஒரே வரி' அமைப்பின் கீழ் வரி செலுத்துகிறோம். முன்பு இந்த வரி மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். ஆனால், இப்போது நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு பொருளுக்கு மற்ற மாநிலங்களில் செலுத்தும் அதே அளவு வரிதான் செலுத்த வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ஆகியவை அடங்கும்.