தினமும் நமக்கு பலவிதமான கனவுகள் வந்தாலும் சில கெட்ட கனவுகளும் வருவதுண்டு. இப்படி கெட்ட கனவுகள் வந்தால் கெட்டது நடக்கப் போகிறதோ என்ற பலரும் இருக்கும். அடிக்கடி வரும் கெட்ட கனவுகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கு என்ன செய்யலாம். வாங்க தெரிந்து கொள்ளலாம்.

சென்னை : நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒரு அர்த்தம், பலன் உள்ளதாக கனவு சாஸ்திரம் சொல்கிறது. இந்த கனவுகள் காணும் நேரத்தை பொருத்து அவற்றின் பலன்களும், பலிக்கும் காலமும் மாறுபடும் என சொல்லப்படுகிறது. அப்படி காணும் கனவுகள் நல்லதாக இருந்தால் சரி. ஆனால் கெட்ட கனவாக இருந்தால் என்ன செய்வது? அடிக்கடி கெட்ட கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம்? கெட்ட கனவு வந்தால் கெட்டது தான் நடக்குமா? கெட்ட கனவுகள் வராமல் இருக்கவும், அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கவும் என்ன செய்யலாம்?

நல்ல கனவுகளுக்கு கெட்ட பலன்களும், கெட்ட கனவுகளுக்கு நல்ல பலன்களும் சொல்லப்படுவது உண்டு. அனைத்து கெட்ட கனவுகளும் கெட்ட பலன்களை தராது. சில கெட்ட கனவுகள் நமக்கு நல்லது நடக்க போவதன் அறிகுறியாக தோன்றுவதாகும். உதாரணத்திற்கு, 

கெட்ட கனவுகளும் நல்ல பலன்களும் :

* நமக்கு நெருக்கமானவர் அல்லது நண்பர் இறந்து போவதாக கனவு கண்டால் அவரது ஆயுள் நீடிக்கும் என்று அர்த்தம். 

* உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவதாக கனவு கண்டால், உங்களுக்கு செல்வம், செல்வாக்கு அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். 

* பாம்பு கடித்து ரத்தம் கொட்டுவது போல் கனவு கண்டால் உங்களின் திறமைகள் வெளிப்பட்டு, அதன் மூலம் உங்களின் வாழ்க்கை நிலை உயரப் போகிறது என்று அர்த்தம். 

* நெருப்பை கனவில் கண்டால் உங்களுக்கு பெரும் செல்வம் சேரப் போகிறது என்று அர்த்தம். அதே சமயம் வீடு தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால், கெட்ட தகவல் ஒன்று தேடி வரப் போவதாக அர்த்தம். 

* உயிருடன் இருப்பவர்கள் இறந்து போவதாக கனவு கண்டால் அவர்களில் நோய்கள் நீங்கி, அவர்கள் ஆயுள் அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். 

* தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த மிகப் பெரிய ஆபத்து உங்களை விட்டு விலகி போவதாக அர்த்தம். 

* இறந்தவர்கள் வீட்டுக்கு வருவதாக கனவு கண்டால் சுப காரிய பேச்சுக்களில் நன்மை கிடைக்கும் என்று அர்த்தம்.

கெட்ட கனவுகள் :

பாம்பு உங்களை சுற்றி கொள்வதாகவோ, இறந்தவர்கள் கனவில் வந்து அழுவதாகவோ, பேய்கள் துரத்துவதாகவோ, குறுகலாக இடத்திங் சிக்கிக் கொள்வது போன்றோ கனவு கண்டால் அது நல்லதல்ல. இவைகள் உங்களுக்கு வரப் போகும் துன்பங்கள், ஆபத்துக்களை உணர்த்தும் கனவுகள் ஆகும். இத போல் பயமுறுத்தும் வகையிலான கெட்ட கனவுகள் அடிக்கடி வருகிறது என்றால் கண்டிப்பாக அது பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது. அதற்காக பயப்படவும் தேவையில்லை. சில எளிய பரிகாரங்களை செய்வதால் இது போன்ற கெட்ட கனவுகளால் ஏற்படும் பிரச்சனைகளின் பாதிப்புக்கள் ஏற்படுவதில் இருந்து தவிர்க்க முடியும்.

கெட்ட கனவுகளுக்கான பரிகாரங்கள் :

அடிக்கடி கெட்ட கனவுகள் வருகிறது என்றால் பசு மாட்டிற்கு பழம், கீரை போன்ற உணவுகள் வாங்கி சாப்பிடக் கொடுக்கலாம். குலதெய்வ வழிபாடு அல்லது ஏதாவது தெய்வத்திற்கு வேண்டிய நேர்த்திக்கடனை நிறைவேற்றாமல் விட்டாலும், வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகமாக இருந்தாலும் இது போன்ற கெட்ட கனவுகள் அடிக்கடி வரும். அதனால் முறையாக குல தெய்வ வழிபாடு, காவல் தெய்வ வழிபாடுகளை முறையாக செய்வதால் கெட்ட கனவுகள் வருவதும், அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்தும் தப்பிக்க முடியும்.