முதன்முறையாக ஓடிடி-யில் களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா - வைரலாகும் ‘வதந்தி’ வெப் தொடரின் டிரைலர்

Nov 22, 2022, 2:08 PM IST

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வில்லன், ஹீரோ என தொடர்ந்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி கலக்கி வரும் இவர், தற்போது முதன்முறையாக வதந்தி என்கிற வெப் தொடரின் மூலம் ஓடிடி-யில் களமிறங்கி உள்ளார். அவர் நடித்துள்ள இந்த வெப் தொடரை கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார்.

இந்த வெப் தொடரை விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர். இந்த வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதில் அவருடன் லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்நிலையில், வதந்தி வெப் தொடரின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. ஒரு இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும், அதனை சுற்றி இருக்கும் மர்ம முடிச்சுகளை நாயகன் எஸ்.ஜே.சூர்யா எப்படி அவிழ்கிறார் என்பதை விறுவிறுப்புடன் சொல்லி உள்ளது இந்த வெப் தொடர். வருகிற டிசம்பர் 2-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வதந்தி வெப் தொடர் ரிலீசாக உள்ளது.