AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!

Mar 29, 2024, 10:50 PM IST

சிவகங்கை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்க்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில், ஏராளமானோர் சிவகங்கை சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சிவகங்கை அருகே கொட்டகுடி, குமாரபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்கு கேட்டு சென்றபோது ஏராளமான பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து வேட்பாளரின் ஆதரவாளர்கள் வேட்பாளர் சார்பாக தட்டுகளில் பணத்தினை பட்டுவாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு அதிகாரி தலைமையில் கண்காணிப்புக் குழு வீடியோ பதிவு செய்து வருகிறது. இருந்தபோதிலும் இதுபோன்ற பணம் பட்டுவாடு செய்வதை அவர்கள் கண்டு கொள்ளவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது, வாங்க கூடாது என்று தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சிவகங்கை அருகே ஆரத்தி என்ற பெயரில் பணம் கொடுப்பவர்கள் மீதும் அதனைக் கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீதும் மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.