Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!

Apr 5, 2024, 11:21 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபரும், திமுக அபிமானியுமான திருச்செங்கோடு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகத்தின் நெருங்கிய உறவினருமான, தனசேகர் என்பவர் வீட்டில் தேர்தலுக்கான பணம் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமாவுக்கு வந்த  ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் வருமானவரித்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் தனசேகர் என்பவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுவரை இரண்டு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன் இவர் வீட்டில் தேர்தலுக்கு பணம் கொடுக்க பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா வருமானவரித்துறைக்கு தனசேகர் வீட்டில் சோதனையிட பரிந்துரை செய்தார். 

திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை முதல் 12க்கும் மேற்பட்ட  வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் அவரது வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. தற்போது சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் நிறைவில் தான் எவ்வளவு பணம் பிடிப்பட்டது என்பது முழுமையாக தெரிய வரும். 

இந்த தனசேகர் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரியில் நிர்வாகியாக உள்ளார் என்பதும், இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகத்தின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எட்டிமடை புதூரில் நடைபெற்று வரும் சோதனை திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.