மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?

Jun 23, 2024, 11:09 PM IST

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 50க்கும் அதிகமான நபர்கள் இறந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது என்றால் அது மிகையல்ல. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருனாபுரம் பகுதியில் நான் இந்த சோக நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த கோர சம்பவத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் காரணம் என்று கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

நேற்று சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில், நாளை திங்கட்கிழமை ஜூன் மாதம் 24ம் தேதி, அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.  

இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த பாஜகவினர், கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், மதுபான கடையில் இருந்து வாங்கிய பீர்பாட்டில்களை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்பொழுது அவர்களுக்கு அருகாமையில், மதுவை கீழே ஊற்றிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டிருந்த மதுப்பிரியர் ஒருவர் அதை தனக்கு தருமாறும், கீழே கொட்ட வேண்டாம் என்றும் ஏக்கத்தோடு அவர்களை பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், அவர்கள் கையில் இருந்து பாட்டிலை பிடுங்கவும் முயற்சி செய்தார். 

இறுதியில் அவர் தொல்லை தாங்காத பாஜகவினர், அவரிடம் ஒரு பாட்டிலை கொடுத்து அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.