திருச்சியில் பெண் பயணியை ஒருமையில் திட்டிய தனியார் பேருந்து நடத்துனருக்கு கும்மாங்குத்து

Feb 12, 2024, 10:42 AM IST

திருச்சி காட்டூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது  மகன் மூக்கையா(வயது 22). இவர் தனியார் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது  சூளக்கரை  மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறக்க வேண்டிய பெண் பயணி ஒருவரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் பேருந்தை நிறுத்தி இறக்கி விட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி மூக்கையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மூக்கையா அந்த பெண் பயணியை ஒருமையில் திட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பேருந்து துவாக்குடி சென்று மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்த போது சூளக்கரை மாரியம்மன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த இளைஞர்கள் 5 பேர் பேருந்தில் ஏறி மூக்கையாவை கடுமையாக தாக்கினர். 

இதில் கடுமையான காயமடைந்த மூக்கையா காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்டிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்களான 5 இளைஞர்களையும் தேடி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.