Watch : திருச்சி அருகே கோவில் திருவிழாவில் மோதல்! - போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

Jun 1, 2023, 12:51 PM IST

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வரதராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நேற்று மஞ்சள் நீராடுதல் விழாவை முன்னிட்டு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் திருத்தேரை முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்தனர்.

அப்போது இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கல்வீச்சு நடந்ததில் சுமார் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி எஸ் பி சுர்ஜித்குமார், எ.டி.எஸ்.பி குத்தாலிங்கம், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் வரதராஜபுரம் கிராமத்திற்கு உடன் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



மேலும் தகராறு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில் திருவிழாவில் கல் வீச்சு சம்பவம் தொடர்ந்து மேலும் பதற்றத்தை தவிர்க்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.