சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

Feb 7, 2024, 4:57 PM IST

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த வரலாற்று துறை உதவி பேராசிரியரும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளருமான பிரேம்குமார் மீது கடந்த 2022ல் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஜாதி பெயரை கூறி திட்டி மிரட்டல் விடுத்ததாகவும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. 

குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக பதிவாளர், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்தார். இதையடுத்து பிரேம்குமார் மீது பாலியல் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேம்குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.