மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - நடிகர் வடிவேலு

Feb 7, 2024, 4:15 PM IST

தமிழ் சினிமாவின் பல்வேறு உயரங்களை எட்டிய நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாய் சரோஜினி(87 ) வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவரது மரணம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது தாயாரின் ஆன்மா சாந்தியடைவதற்காகவும், அவர்கள் வைகுண்டம் பதவியடைவதற்கும் அவர்களுக்கு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில்   நந்திமண்டபத்தில்  மோட்சதீபம் ஏற்றினார்.  

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் வடிவேலு, எனக்கு  எல்லாமே என்   தாயார் தான். அவர் இறந்த துக்கத்தை  என்னால் தாங்க முடியவில்லை. இந்த சோகத்தில் இருந்து  என்னால் மீள முடியவில்லை என்றார். மேலும் செய்தியாளர்கள் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பாக கருத்து கேட்ட பொழுது, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். 

மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். டி ராஜேந்தர் வந்தார், ராமராஜன் வந்தார், பாக்யராஜ் வந்தார் ஆகவே மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என சொல்ல முடியாது அல்லவா என அவர் தோரணையில்  கேள்வி எழுப்பினார்.