அக்னி பகவானே இந்த வருசம் பணம் கொட்டனும்; வங்கி லாக்கர் முன் யாகம் வளர்த்த அதிகாரிகள் - வாடிக்கையாளர்கள் ஷாக்

Feb 29, 2024, 8:13 PM IST

தருமபுரி கூட்டுறவு நகர வங்கி, தருமபுரி கடைவீதி பகுதியில் உள்ளது. இங்கு நடந்த பூஜை தொடர்பான, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கூட்டுறவு நகர வங்கியில் கடந்த, 25ம் தேதி விடுமுறை நாளில் அதிகாலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. வங்கியில் வாடிக்கையாளர்களின், பணம், நகைகள், ஆவணங்களை, பாதுகாப்பாக வைக்கக்கூடிய லாக்கர் முன், கடவுளின் படம் வைத்து, 2 மணி நேரத்திற்கும் மேல் யாகம் நடத்தப்பட்டுள்ளது. 

இதில், வங்கியின் துணை பதிவாளர் ராஜா, என்பவர் வங்கிக்குள் லாக்கர் முன் அமர்ந்தபடி, பூஜையை நடத்தியுள்ளார். இந்த வங்கியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்கள், தற்போது பணிபுரியும் ஊழியர்கள், இந்த பூஜையில் பங்கேற்றுள்ளனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வங்கிகள் கணிணி மயமாகும் போது, இந்த வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நிலையில், முறைகேடு சர்ச்சைக்குள் சிக்கிய அந்த வங்கிக்குள், விடுமுறை நாளில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வங்கியை தங்களின் சொந்த விருப்பத்திற்கு பயன்படுத்திய அதிகாரிகள் மீது, வங்கியிலுள்ள சிசிடிவி., காட்சிகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வங்கியின் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.