தருமபுரியில் குறைகளை கூற வந்த பொதுமக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக சேர்மனின் கணவர்

Feb 15, 2024, 7:40 PM IST

தருமபுரி நகராட்சியில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான செல்லியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏலம் விடப்பட்டுள்ளது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இந்நிலையில், முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் சம்பந்தப்பட்ட இடத்தில் தற்காலிக கட்டிடம் கட்டி அதில் உணவகம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக அனுமதி பெறவும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து சுமார் 1 மாத காலம் முடிவடைந்த நிலையிலும் முறையான பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்காலிக கட்டிடத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணியை சந்தித்து முறையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தடங்கம் சுப்பிரமணி இது தொடர்பாக நகர்மன்ற தலைவர் லட்மியிடமும், அவரது கணவர் நாட்டான் மாதுவிடமும் பேசியுள்ளார். இதனையடுத்து ஒப்பந்ததாரர்களை நகர்மன்ற அலுவலகத்திற்கு நேரில் வருமாறு தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் நகர்மன்ற அலுவலகத்திற்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது நகர்மன்ற உறுப்பினர் லட்சுமியும், அவரது கணவர் நாட்டான் மாதுவும், எங்களுக்கு தெரியாமல் மாவட்டச் செயலாளரை சந்தித்தது ஏன் என கேட்டு ஒருமையில் பேசி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை முருகேசனின் உடன் சென்ற நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.