ஆயுதப்படை மைதானத்தில் துள்ளல் நடனம் போட்ட காவலர்கள்; மனஅழுத்தத்தை குறைக்க புதிய முயற்சி

Feb 17, 2024, 11:43 AM IST

கோவை மாவட்டத்தில் காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகா பயிற்சிகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வாரம் தோறும் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் காவலர்களுக்கு உடல்சோர்வு நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

அந்த வரிசையில் புது முயற்சியாக கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு ஜூம்பா நடன பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. ஜூம்பா நடனம் சுவாச பிரச்சனை, மன அழுத்தம், செரிமான பிரச்சனைகள், உடல் எடையை சீராக வைத்தல், நல்ல உறக்கம் ஆகியவற்றிற்கு உதவும் என்பதால் காவலர்களுக்கு இந்த நடன பயிற்சி அளிக்கப்படுகிறது. 

முதல் நாள் வகுப்பில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் வரும் நாட்களில் இது விரிவுபடுத்தப்பட்டு அனைத்து காவலர்களுக்கும் இந்த நடன பயிற்சி அளிக்கப்பட உள்ளது.