அத்திகடவு - பில்லூர் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு.. கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீண்

Jun 9, 2023, 10:59 PM IST

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு சுமார் 88 கோடி மதிப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யலையம் முதல் வண்ணாங்கோவில் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் தினமும் வாகன நெரிசல்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஏற்படும் புழுதியில் தான் மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அத்திக்கடவு - பில்லூர் குடிநீர் 1வது திட்டத்தில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இன்று மாலை அந்த குடிநீர் குழாய் உடைத்து குடிநீர் ஆற்று வெள்ளம் போல பெரியநாயக்கன்பாளையத்தில் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து உடனடியாக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முக்கிய தண்ணீர் குழாயாக இருப்பதால் உடனடியாக தண்ணீரை நிறுத்தமுடியவில்லை.

இதன்காரணமாக கோடிகாணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது. இரவு நேரத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் வேலை செய்யவுள்ளனர். மேலும் வரும் 2 நாட்களுக்கு அத்திகடவு குடிநீர் விநியோகம் இருக்காது என்று தெரிகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!