தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்
தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு டிஐஜியாக மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்பிசிஐடி - சிறப்பு பிரிவின் எஸ்.பி அருளரசுக்கு தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமையக கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பி சசிமோகனுக்கு, மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல: தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு..!
தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த தமிழக காவல்துறையில் சிறப்பு பிரிவை உருவாக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார். இதையடுத்து, அதற்கான பணிகளை உள்துறை மேற்கொண்டு வந்தது. ஏற்கனவே, கேரளா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் ஏற்கனவே தீவிரவாத தடுப்புப் பிரிவு உள்ள நிலையில், காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்று அப்பிரிவு செயல்படும் விதம், கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும், பல்வேறு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. உளவுத்துறை ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) செயல்படும் எனவும், இப்பிரிவுக்கு டிஐஜி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி தலைமை வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரிவில் 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இப்பிரிவில் பணியாற்றவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.