மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையீடு.. களத்தில் இறங்கிய கேரளா அரசு- ஆதரவு தெரிவித்த ஸ்டாலின்

Published : Feb 06, 2024, 12:50 PM IST
மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையீடு.. களத்தில் இறங்கிய கேரளா அரசு- ஆதரவு தெரிவித்த ஸ்டாலின்

சுருக்கம்

 மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்கு, தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கேரளாவிற்கு ஆதரவு தெரிவித்த தமிழகம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது என்றும், மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான ஒருமித்த கருத்து உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், இருப்பினும் மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த. இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அவசரப்பட்டு அரசியலுக்கு வந்து விட்டார்.! அதிமுக, திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை-கதிரவன் அதிரடி

நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கு அச்சுறுத்தல்

இதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் தனது கடிதத்தில் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக  முதலமைச்சர் தனது கடிதத்தில் புள்ளிவிவரங்களுடன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

முதலாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும், 2023-2024 ஆம் ஆண்டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது என்றும், இதனால், நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட தமிழக அரசு

இரண்டாவதாக, மின் துறை சீரமைப்புகளுக்காக கூடுதல் கடன் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளின்படி, மாநில மின் விநியோக நிறுவனங்களின் (DISCOMS) மொத்த இழப்புக்கு நிதியளிக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையால், நடப்பாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.17,111 கோடி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது என்றும், இது இந்த ஆண்டு மாநிலத்தின் நிதி வாய்ப்புகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது என்றும், எதிர்காலத்திலும் மாநிலங்களை பாதிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் திட்டம்

மூன்றாவதாக, ஒன்றிய அரசின் திட்டமான சென்னை மெட்ரோ இரயில் 2 ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், இத்திட்டத்திற்கான மொத்த கடனான 33,594 கோடி ரூபாய் முழுவதும், மாநிலத்தின் நிகரக் கடன் உச்சவரம்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது என்றும், இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்

மாநிலங்களின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களைத் திரட்டுவதற்கும் முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் உள்ள திறனை முடக்குவதையே ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர், ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.  இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது என்றும், இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ்நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டுமென்று தனது கடிதத்தில் ஸ்டாலின்  கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

கூட்டணியில் இழுபறி.! 12 மக்களவை தொகுதி, 1 ராஜ்ய சபா சீட் கேட்கும் பாமக.? பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!