
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் மறக்க முடியாத நினைவாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தன்னை ஒரு கிரிக்கெட் வீரராக்கிய மனிதருக்கு பிறந்தநாளன்று அவரை நினைவு கூறும் வகையில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: என்னை கிரிக்கெட் வீரராக்கிய மனிதருக்கு! அவர் கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்து வந்தன. உங்கள் பிறந்தநாளில் உங்களை மேலும் நினைவுகூர்கிறேன். எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் மிக்க நன்றி அச்ரேக்கர் சார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரமாகாந்த் அச்ரேக்கர் கடந்த 2019 ஆ ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தனது 87ஆவது வயதில் காலமானார். ஆனால், அதற்கு முன்னதாக 1990 ஆம் ஆண்டு ஒரு பயிற்சியாளராக விளையாட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டிற்கு அவருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றார்.
IND vs AUS T20I:3ஆவது இந்திய வீரராக ருதுராஜ் சாதனை – 9 ரன்களில் கோலி சாதனையை கோட்டைவிட்ட கெய்க்வாட்!
சச்சின் டெண்டுல்கர் விளையாடிய 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 51 சதங்கள், 68 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 248* ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று, 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 18,426 ரன்கள் குவித்துள்ளார். இதில், 49 சதங்கள், 96 அரைசதங்கள் அடங்கும். ஒரு டி20 போட்டியிலும் விளையாடி 10 ரன்கள் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 664 போட்டிகள் விளையாடி மொத்தமாக 34, 357 ரன்கள் குவித்துள்ளார். இதில், 100 சதங்களும், 164 அரைசதங்களும் அடங்கும். சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. கடந்த 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.