அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி கூட்டணிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்து பேச மறுத்த நிலையில், தற்போது அதற்கான காரணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், இந்த கூட்டணி கடந்த ஏப்ரல் மாதமே முடிவு செய்யப்பட்டு விட்டது. NDA கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும், தமிழகத்தில் கூட்டணிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை பாஜக.வும் உறுதிபடத் தெரிவித்துவிட்டது. கூட்டணி உறுதிசெய்யப்பட்டு விட்டாலும் இரு கட்சி தொண்டர்களிடையே தற்போது வரை இணக்கம் ஏற்படவில்லை.
உதாரணமாக அதிமுக பொதுச் செயலாளர் தமிழகம் முழுவரும் மக்களை சந்திக்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்திற்கு அதிமுக தொண்டர்கள் திரளாகக் கலந்து கொள்ளும் நிலையில் பாஜக கொடிகளைப் பெருமளவில் காண முடிவதில்லை.
24
தமிழகத்தில் பிரதமர் மோடி
இதனிடையே அண்மையில் தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைப்பது, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு நினைவு நாணயத்தை வெளியிடுவது உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவார் என்ற தகவல் வெளியானது. இருவர் இடையேயான சந்திப்பு சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் நீடிக்கும் என்று சொல்லப்பட்டது.
34
முட்டுக்கட்டை போடும் பழனிசாமி
ஆனால், இவை அனைத்திற்கும் மாறாக பிரதமர் மோடியோ விமான நிலையத்திற்கு வந்த வரவேற்பாளர்களுக்கு கைகுழுக்கிவிட்டு செல்வது போல் பழனிசாமியிடமும் நடந்து கொண்டார். மேலும் இருவர் இடையேயான சந்திப்பும் நடைபெறவில்லை. இதனால் அதிமுக, பாஜக தொண்டர்கள் இடையே குழப்ப நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பழனிசாமியை பிரதமர் மோடி சந்திப்பதை தவிர்த்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது. அந்த வகையில், தமிழகம் போன்ற வலுவான மாநிலத்தில் பாஜக கூட்டணி மூலம் ஆட்சி பொறுப்பில் அமர வேண்டும் என்ற மனநிலையில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் எழுந்துள்ளது. ஆனால், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பழனிசாமி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடுவதால் பிரதமர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி மத்திய பாஜக அரசு செய்த சாதனைகளையோ, பிரதமர் மோடி தொடர்பாகவோ தனது பிரசாரத்தின் போது எந்த இடத்திலும் புகழ்ந்து பேசாதது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கட்சி மேலிடத்தில் புகார் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பழனிசாமி மீது விரக்தியடைந்து அவரை சந்திப்பதை மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.